பெரியகுளம் பொதுக்கூட்டத்தில் நாளை என்ன பேச போகிறார் இபிஎஸ்? - அதிமுகவினர் எதிர்பார்ப்பு

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சொந்த ஊரான பெரியகுளம் தொகுதியில் நாளை நடக்கும் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி என்ன பேசப் போகிறார்? என்பது அதிமுகவை தாண்டி, அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நல உதவிகள் வழங்கும் விழா தேனி மாவட்ட அதிமுக சார்பில் பெரியகுளம் அருகே வடபுதுப்பட்டியில் நாளை (மார்ச் 2) நடைபெறுகிறது. இதுபோன்ற பொதுக்கூட்டங்களில், கட்சியின் சிறப்பு பேச்சாளர்கள், 2-ம் கட்ட தலைவர்கள் கலந்துகொண்டு பேசுவார்கள். ஆனால், வடபுதுப்பட்டியில் நாளை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி பங்கேற்று பேச உள்ளார்.

பெரியகுளம் பகுதியைத் தேர்ந்தெடுத்ததற்கு அத்தொகுதி ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊர் என்பது முக்கியக் காரணமாக கூறப்படுகிறது. இந்தப் பொதுக்கூட்டம் அதிமுகவை தாண்டி, தமிழக அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவத்தையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இப் பொதுக்கூட்டத்தை மாநாடு போல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார், முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, அமைப்புச் செயலாளர் விவி.ராஜன் செல்லப்பா, எஸ்கேடி.ஜக்கையன் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள். இக்கூட்டத்தில் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் அமைச்சர்கள் நத்தம் ஆர்.விஸ்வநாதன் உள்ளிட்ட தென் மாவட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டு பேசுகின்றனர்.

இதுகுறித்து அதிமுக முக்கிய நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, கட்சி பழனிசாமியின் கட்டுப்பாட்டுக்குக் கீழ் வந்தாலும் இரட்டைத் தலைமையின் கீழ் செயல்பட்டது. அதன் பிறகு ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கிவிட்டு, தற்போது கட்சியின் ஒற்றைத் தலைமையாக பழனிசாமி நீடிக்கிறார். ஆனால் அவரால் எதிர்பார்த்த வெற்றியை கடந்த மக்களவைத் தேர்தலில் பெற முடியவில்லை. இதனால் தொண்டர்களும் ஒருவித சோர்வுடன் இருந்தது உண்மைதான்.

தற்போது சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் திமுக ஆட்சியின் மீது கெட்டபெயர் அதிகரித்துள்ளது. விலைவாசி உயர்வு, சட்டம்-ஒழுங்கு பாதிப்பால் மக்களும் அதிருப்தியில் உள்ளனர். அரசு ஊழியர்கள், சிறுபான்மை மக்களும் இந்த ஆட்சி மீது வெறுப்பில் உள்ளனர். அதனால், வரும் சட்டப்பேரவை தேர்தல் அதிமுகவுக்கு சாதகமாக இருக்க வாய்ப்புள்ளதாக கட்சியினர் கருதுகின்றனர்.

இந்நிலையில் தேர்தலை சந்திக்க, பிரிந்து கிடக்கும் அதிமுக ஒருங்கிணைய வேண்டும், அதற்கு சசிகலா, டிடிவி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை சேர்க்க வேண்டும் என்று அவர்களும், அவரது ஆதரவாளர்களும் வலியுறுத்தி வருகின்றனர். ஓ.பன்னீர்செல்வம் ஒரு படி மேலே போய், எந்த நிபந்தனையும் இல்லாமல் அதிமுகவில் இணையத் தயாராக இருக்கிறேன் என்றார். இவர்கள் மூவரையும் இணைக்க, அதிமுகவிலேயே ஒரு தரப்பினர் திரைமறைவில் ஆதரவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்தச் சூழலில், ஜெயலலிதா பிறந்த நாள் அன்று, அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், ஓநாயும், வெள்ளாடும் ஒன்று சேர முடியுமா?’ என்று குறிப்பிட்டு கட்சித் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியிருந்தார். அவரின் இந்தக் கருத்தால், அதிமுகவில் இனி எக்காரணம் கொண்டும் சசிகலா, டிடிவி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு வாய்ப்பே இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரில் நாளை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பழனிசாமி பங்கேற்பதால் கட்சியினர் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் பங்கேற்கும் கே.பழனிசாமி கட்சித் தொண்டர்களுக்கு, தேர்தலில் எதுமாதிரியான கூட்டணியை அமைக்கப் போகிறோம் என்பதைத் தெரிவிக்க வாய்ப்புள்ளதாக அவருக்கு நெருக்கமானோர் கூறுகின்றனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE