சென்னை: சூரியனின் புறவெளியில் நிகழ்ந்த ஒளி வெடிப்பை ஆதித்யா விண்கலத்தில் உள்ள சூட் கருவி படம் பிடித்து சாதனை படைத்துள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. சூரியனின் வெளிப்புற பகுதியை ஆராய்வதற்காக இஸ்ரோ வடிவமைத்த ஆதித்யா எல்-1 எனும் நவீன விண்கலம் பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 2023 செப்.2-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது.
இது 127 நாட்கள் பயணித்து பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கி.மீ தொலைவில் உள்ள எல்-1 எனும் லெக்ராஞ்சியன் புள்ளியை மையமாகக் கொண்ட சுற்றுப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. அங்கிருந்தபடியே சூரியனின் கரோனா, போட்டோஸ்பியர் மற்றும் குரோமோஸ்பியர் பகுதிகளை விண்கலம் ஆய்வு செய்து அரிய தகவல்களை வழங்கி வருகிறது.
இந்நிலையில், ஆதித்யா விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள சூட் எனும் சாதனம் சூரியனின் வெளி அடுக்குகளில் இதுவரை அறியப்படாத ஒளி வெடிப்பு சிதறலை புகைப்படம், வீடியோ எடுத்துள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
இதுகுறித்து இஸ்ரோ வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:ஆதித்யா விண்கலத்தில் உள்ள சோலார் அல்ட்ராவைலட் இமேஜிங் டெலஸ்கோப் எனும் சூட் கருவியானது சூரியனின் போட்டோஸ்பியர் மற்றும் குரோமோஸ்பியரில் இருந்து வெளிவரும் புற ஊதா கதிர்கள் குறித்தும், அதன்மூலம் ஏற்படும் கதிர்வீச்சு மாறுபாடுகள் குறித்தும் ஆய்வுகளை மேற்கொள்ள அனுப்பப்பட்டுள்ளது.
» அரசு அலுவலகங்களில் தமிழை பயன்படுத்த ஓபிஎஸ் வலியுறுத்தல்
» சென்னை | போலி மாநகராட்சி அதிகாரிகள் 3 பேர் கைது: மீன் கடைகளுக்கு உரிமம் வழங்கியபோது சிக்கினர்
அதன்படி போட்டோஸ்பியர் மற்றும் குரோமோஸ்பியரின் படங்களை அந்த கருவி தொடர்ந்து எடுத்து அனுப்பி வருகிறது. பொதுவாக, சூரியனின் காந்தபுலத்தில் திடீரென ஏற்படும் மாற்றங்களால் ஒளி வெடிப்பு ஏற்பட்டு ஆற்றல் வெளிப்படும். இது சோலார் ஃப்ளேர் என்று அழைக்கப்படும். சமீபத்தில் அத்தகைய ஒளி வெடிப்பு சூரியனின் கீழ் புறவெளியில் நிகழ்ந்ததை சூட் கருவி படம் பிடித்துள்ளது. அந்த தரவுகளைக் கொண்டு ஆராய்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இத்தகைய ஒளி வெடிப்புகள் புவியின் தட்பவெப்ப நிலையில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். சூரியனின் கதிர்வீச்சால் ஏற்படும் பாதிப்புகளை தடுப்பதற்கு இந்த ஆய்வுகள் உதவும். இதன்மூலம் விண்வெளி ஆய்வில் புதிய சகாப்
தம் படைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.