சென்னை: சீமானின் வீட்டில் ஒட்டிய சம்மனை நான்தான் கிழிக்கச் சொன்னேன் என்றும், கைது செய்தவர்களை போலீஸார் தாக்கியுள்ளதாகவும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் மனைவி கயல்விழி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: சீமான் ஊரில் இல்லாத நிலையில், வளசரவாக்கம் காவல்துறையினர் சம்மன் கொண்டு வருகிறார்கள் என்ற செய்தி எனக்கு வந்தது. எனவே காவல்துறையினரிடம் கையெழுத்து போட்டு சம்மனை வாங்கிக்கொள்ளலாம் என்ற முடிவில் இருந்தேன். ஆனால் வீட்டுக்கு வந்த போலீஸார், எங்களிடம் எதுவுமே தெரிவிக்காமல், சம்மனை கதவில் ஒட்டிவிட்டுச் சென்றுவிட்டனர்.
இதையடுத்து பணியாளர் சுபாகரிடம், சம்மனை படிப்பதற்காக நான்தான் கிழித்து எடுத்துவர சொன்னேன். அப்போது திடீரென வீட்டுக்குள் நுழைந்த நீலாங்கரை போலீஸார் பாதுகாவலர் அமல்ராஜுடன் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர். அதிர்ச்சியடைந்த நான் அமல்ராஜ்தான் போலீஸாரை தள்ளிவிட்டதாக நினைத்து போலீஸாரிடம் மன்னிப்பு கேட்டேன்.
போலீஸாரை தாக்கவில்லை: ஆனால் அமல்ராஜ் போலீஸாரை தாக்கவில்லை. கதவை தள்ளிவிட்டு வீட்டுக்குள் வந்த காவல்துறையினர்தான் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர் என தெரியவந்தது. ஒரு முன்னாள் ராணுவ அதிகாரி என்றும் பாராமல், குப்பை மாதிரி அவரை தூக்கி போட்டு ஜீப்பில் ஏற்றினர். அப்போது, தன்னிடம் இருந்த துப்பாக்கியை அமல்ராஜ் தானாகவே எடுத்து போலீஸிடம் கொடுத்திருக்கிறார். ஆனால் தூப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாக அவர் மீது வழக்கு பதிந்துள்ளனர்.
திட்டமிட்ட சதி: அதோடு சுபாகரையும் உடன் அனுப்பவில்லை என்றால் போலீஸ் படையை இறக்குவோம் என்று மிரட்டினர். இது முழுக்க காவல்துறையின் திட்டமிட்ட சதியாகும். வளசரவாக்கம் போலீஸார் ஒட்டிவிட்டுச் சென்ற சம்மனை, நீலாங்கரை போலீஸார் ஏன் வந்து பார்க்க வேண்டும்? சம்மன் கிழிக்கப்பட்டது தொடர்பாக போலீஸார் என்னிடம் பேசியிருக்கலாமே.
அதைவிடுத்து கதவை தள்ளிக்கொண்டு வீட்டுக்குள் வரவேண்டிய அவசியம் என்ன? மேலும், கைது செய்த இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லாமல், ஒரு பூங்காவுக்கு அழைத்துச் சென்று அடித்திருக்கின்றனர். அதன்பின் காவல் நிலையத்திலும் இரும்பு கம்பியில் துணியை சுற்றி அடித்துள்ளனர். அவர்கள் அப்படி என்ன தப்பு செய்தார்கள்? சீமான் ஊரில் இல்லை என தெரிந்திருந்தும் வேண்டுமென்றே காவல்துறையினர் இதை செய்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.