‘குளிர்பானங்களை தவிருங்கள், பருத்தி ஆடை அணியுங்கள்’ - கோடையை சமாளிக்க எச்சரிக்கை!

By KU BUREAU

ஈரோடு: கோடை வெப்ப அலைகளால் வெப்ப தாக்கத்தில் இருந்து தப்பிக்க குளிர்பானங்களைத் தவிர்த்து, பருத்தி ஆடைகளை அணிய வேண்டும், என ஈரோடு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்தில் தற்போது கோடை வெப்ப அலைகளால் வெப்ப தாக்கம் அதிகமாக உள்ளது. மனித உடலின் சராசரி வெப்ப நிலை 37 டிகிரி செல்சியஸ் ஆகும். சுற்றுப்புற சூழல் வெப்ப நிலை அதிகமாகும் போது, அதிகமான வியர்வை வழியாக உப்பு மற்றும் நீர்ச்சத்து அதிகமாக வெளியேறுகிறது. அதிக வெப்பத்தால் அதிக தாகம், தலை சுற்றல், கடுமையான தலை வலி, தசைப் பிடிப்பு, உடல் சோர்வடைதல், மயக்கம் மற்றும் வலிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

மேலும், பச்சிளம் குழந்தைகள், சிறுவர் சிறுமியர், வயதானவர்கள், கர்ப்பிணிகள், இணை நோய் உள்ளவர்களுக்கு வெப்பத்தாக்க அதிர்ச்சி ஏற்பட்டு உயிரிழப்பும் ஏற்பட வாய்ப்புள்ளது. கோடை வெப்ப தாக்க பாதிப்புகளை தடுக்க காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெயிலில் நடமாடுவதை தவிர்க்கவும். வெளியே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டால் குடை கொண்டு செல்ல வேண்டும்.

வெப்பத்தினால் ஏற்படும் நீர் இழப்பை தடுக்க, தண்ணீர், மோர், அரிசி கஞ்சி, இளநீர், பழச்சாறு, ஓஆர்எஸ் திரவம் ஆகியவற்றை பருகலாம். மேலும், பருவ கால பழங்களான தர்பூசணி, முலாம்பழம் மற்றும் வெள்ளரி, நுங்கு ஆகியவற்றை உணவாக எடுத்துக் கொள்ளலாம். கோடைக் காலத்தில் வீட்டில் சமைத்த உணவுகளை உட்கொள்வது சிறந்தாகும். குளிர்ந்த நீர் மற்றும் குளிர்ந்த பானங்களை தவிர்க்க வேண்டும். வெளிர் நிறமுள்ள தளர்ந்த பருத்தி ஆடைகளை அணிவதன் மூலம் உடல் வெப்பத்தை குறைக்கலாம்.

வெப்ப தாக்க அதிர்ச்சி ஏற்பட்டால், பாதிக்கப்பட்டவரை குளிர்ந்த, காற்றோட்டமான பகுதியில் படுக்க வைத்து குடிப்பதற்கு பழச்சாறு அல்லது ஓஆர்எஸ் திரவம் அல்லது தண்ணீரை கொடுக்க வேண்டும். அவர்கள் உடல் வெப்பத்தை குறைப்பதற்கு குளிர்ந்த தண்ணீரால் உடல் முழுவதும் நனைத்து விட வேண்டும். பின்பு அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்க வேண்டும்.

கோடை காலத்தில் பரவும் நோய்களான அம்மை, தட்டம்மை, பொன்னுக்கு வீங்கி மற்றும் வெயில் கொப்பளங்களுக்கு அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறலாம். மருத்துவரின் ஆலோசனைப்படி நோய் பாதிப்புக்கு உள்ளானார்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE