சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரனை குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, அவரது தாயார் தொடர்ந்த வழக்கில் காவல்துறை 4 வாரத்துக்குள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில், அப்பகுதியில் பிரியாணி கடை நடத்தி வந்த ஞானசேகரனை போலீஸார் கைது செய்தனர். பின்னர் அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இந்நிலையில் ஞானசேகரனை குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்ததை எதிர்த்து, அவரது தாயார் கங்காதேவி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், ‘‘அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் கடந்த டிசம்பரில் கைதான எனது மகனை குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க வேண்டுமென்ற ஒரே காரணத்துக்காக 2019-ம் ஆண்டு பதியப்பட்ட பழைய வழக்குகளைக் காரணம் காட்டி, மாநகர காவல் ஆணையர், குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்திருப்பது சட்டவிரோதம்.
இதற்கான எந்த விதிமுறைகளையும் போலீஸார் முறையாகப் பின்பற்றவில்லை. ஒருவித அரசியல் அழுத்தம் காரணமாகவே எனது மகனை குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்துள்ளனர். எனவே எனது மகன் மீதான குண்டர் தடுப்புச்சட்ட உத்தரவை ரத்து செய்து விடுவி்க்க உத்தரவிட வேண்டும்’’ எனக் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, இதுதொடர்பாக காவல்துறை தரப்பில் 4 வார காலத்துக்குள் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்துள்ளனர்.