சென்னை: மீன்பிடி பொருளாதாரத்தையும், மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் தமிழக ஆழ்கடல் பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ”மத்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் ஹைட்ரோ கார்பன் எடுப்பு கொள்கையின் கீழ் வெளியிடப்பட்டுள்ள ஏல அறிவிப்பில் தென் தமிழக ஆழ்கடலின் 9990.96 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும் இடம் பெற்றிருப் பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
தமிழ்நாட்டை ஒட்டிய ஆழ்கடல் பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் ஆய்வின் மூலம் அப்பகுதிகளில் இருக்கும் அரிய வகை ஆமைகள், பாலூட்டிகள் உள்ளிட்ட முக்கியமான கடல் வாழ் உயிரினங்கள் கடும் பாதிப்பை சந்திக்கக் கூடும் என கடல்சார் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
ஆழ்கடல் பகுதியில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கும் போது வெளியாகும் ரசாயனக் கழிவுகளால் மீன்வளம் பெருமளவில் குறைவதோடு, மீன்பிடி பொருளாதாரத்தையும் மீனவர்கள் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் என்பதால், மத்திய அரசின் இந்த ஏல அறிவிப்பு மீனவர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
» கும்பகோணத்தில் உள்ள 44 குளங்களை அளவீடு செய்ய 5 நில அளவையர்கள் நியமனம்: சார் ஆட்சியர் உத்தரவு
» சினிமா புகழை வைத்து எல்லாவற்றையும் ஓரம் கட்ட முடியாது: விஜய் குறித்து திருமாவளவன் கருத்து
எனவே, கடல் வளத்தையும் மீன்வளத்தையும் கடுமையாக பாதிக்கும் இத்திட்டத்தை ரத்து செய்வதோடு, அதற்காக வெளியிடப் பட்ட ஏல அறிவிப்பையும் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகிறேன்” என்று தினகரன் தெரிவித்துள்ளார்.