சீமான் வீட்டில் பரபரப்பு: சம்மன் கொடுத்த போலீஸாருடன் மோதலில் 2 பேர் கைது; மன்னிப்பு கேட்ட சீமான் மனைவி!

By KU BUREAU

சென்னை: சம்மன் கொடுப்பதற்காக சீமான் வீட்டினுள் நுழைய முயற்சித்த போலீசாரை, சீமான் வீட்டில் வேலை பார்க்கும் ஊழியர்கள் தடுக்க முயற்சித்தனர். இதனால் சீமான் வீட்டிலிருந்த ஊழியர்களை இழுத்து சென்று போலீசார் கைது செய்தனர்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி வளசரவாக்கம் காவல் நிலையத்தில் 2011-ல் புகார் அளி்த்திருந்தார்.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சீமான் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பாக அண்மையில் நடந்தது. அப்போது ‘‘இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது.
இந்த வழக்கில் போலீஸார் 12 வாரத்துக்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டு சீமான் மனுவை தள்ளுபடி செய்தார்.

இதையடுத்து, வளசரவாக்கம் போலீஸார் சீமானுக்கு அண்மையில் சம்மன் அனுப்பியிருந்த நிலையில், இன்று (பிப்.27) சீமானின் வழக்கறிஞர்கள் அவரது சார்பாக நேரில் ஆஜராகினர். சீமான் தற்போது கிருஷ்ணகிரியில் கட்சி ரீதியான பணியில் ஈடுபட்டிருப்பதால் அவரது வழக்கறிஞர்கள் ஆஜராகி காவல்துறையில் விளக்கமளித்தனர். இந்நிலையில், நாளை (பிப்.,28) காலை 11 மணிக்கு வளசரவாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் கொடுக்க சீமான் வீட்டிற்கு போலீஸார் சென்றனர். போலீஸார் ஒட்டிய சம்மனை சீமான் வீட்டு ஊழியர்கள் கிழித்தனர்.

அப்போது வீட்டினுள் நுழைய முயற்சித்த போலீசாரை, சீமான் வீட்டில் வேலை பார்க்கும் ஊழியர்கள் தடுக்க முயற்சித்தனர். இதனால் சீமான் வீட்டிலிருந்த 2 ஊழியர்களை இழுத்து சென்று போலீசார் கைது செய்தனர். சத்தம் கேட்டு வீட்டில் இருந்து வெளியே வந்த சீமான் மனைவி கயல்விழி, போலீசாரிடம் சமாதானம் பேசி மன்னிப்பு கோரினார். இருப்பினும் போலீஸார் அவர்களை ஜீப்பில் அழைத்துச் சென்றனர். இதனால் சீமான் வீடு அமைந்துள்ள பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE