இந்தி திணிப்புக்கான இன்னொரு செயல் திட்டம்: சிபிஎஸ்இ பள்ளி விதிகளில் திருத்தம் குறித்து வைகோ கருத்து

By KU BUREAU

சென்னை: சிபிஎஸ்இ பள்ளிகளை திறக்க மாநில அரசின் அனுமதி தேவை இல்லை என்று கூறியிருப்பது இந்தி திணிப்புக்கான இன்னொரு செயல் திட்டம் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: வரும் 2026-27-ம் கல்வி ஆண்டு முதல் சிபிஎஸ்இ பள்ளி தொடங்குவதற்கு, மாநில அரசிடம் தடையில்லா சான்றிதழ் பெற அவசியம் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு விதிமுறைகளில் திருத்தம் செய்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது. பொது பட்டியலில் இடம்பெற்றுள்ள கல்வித் துறையில் மத்திய அரசு எதேச்சதிகாரமாக ஆதிக்கம் செலுத்துவது கூட்டாட்சி கோட்பாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நடவடிக்கை. இதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

‘தேசிய கல்விக் கொள்கையை ஏற்காவிட்டால் மத்திய அரசு நிதியை விடுவிக்காது’ என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகிறார். இதைத் தொடர்ந்து, சிபிஎஸ்இ விதிமுறைகளில் திருத்தம் செய்து அறிவிப்பு வருகிறது. தேசிய கல்விக் கொள்கை, மும்மொழி திட்டத்தை தமிழகம் கடுமையாக எதிர்த்து வரும் நிலையில், சிபிஎஸ்இ பள்ளி தொடங்க மாநில அரசின் அனுமதியே தேவையில்லை என்று விதிகளை திருத்துவது, மத்திய பாஜக அரசின் இந்தி திணிப்புக்கான இன்னொரு செயல் திட்டம்தான் என்பதில் சந்தேகம் இல்லை. எனவே, மாநில அரசின் அனுமதி பெறாமல் சிபிஎஸ்இ பள்ளிகள் தொடங்க முயற்சிப்பதை முறியடிப்போம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE