கூடலூர்: கூடலூரில் வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்த இரு குழந்தைகள் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள டி.ஆர்.பஜார் லீஸ் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளர்கள் சதீஸ், ஷாலினி. இவர்கள் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்கள். இங்குள்ள ஒரு தனியார் நிலத்தில் கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு நித்தீஸ் (4), பிரணிதா (3) என்ற குழந்தைகள் உள்ளனர்.
வீட்டு அருகே விவசாயம் செய்வதற்கு ஒரு சிறிய அளவிலான கிணறு உள்ளது.
இன்று (பிப்.23) மதியம் குழந்தைகள் இருவரும் வீட்டை விட்டு வெளியே விளையாட சென்றனர். பின்னர் நீண்ட நேரம் ஆகியும் குழந்தைகள் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அக்கம் பக்கம் தேடினர். பின்னர் அருகே இருந்த கிணற்றை போய் பார்த்தபோது குழந்தைகள் இருவரும் கிணற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்ததை பார்த்து கதறி அழுதனர்.
நடுவட்டம் போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் உடலை மீட்டு கூடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக உதகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
» காட்பாடி அருகே தனியார் கல்லூரி பேருந்து தீயில் எரிந்து சேதம்!
» ஆரோவில் வந்த 13 நாட்டு பிரதிநிதிகள் - கல்வி குறித்து ஆய்வு
இரு குழந்தைகள் கிணற்றில் மூழ்கி உயிரிழந்தது அப்பகுதியை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.