ராமேசுவரம்: பாம்பனில் கட்டப்பட்டுள்ள புதிய ரயில் பாலத்தை திறப்பதற்கான ஏற்பாடுகளை தெற்கு ரயில்வே தீவிரப்படுத்தி வருகிறது. பாம்பன் ரயில் தூக்குப் பாலத்தில் அடிக்கடி ஏற்பட்ட தொழில்நுட்பப் பிரச்சினைகள் மற்றும் விரிசல் விழுந்ததாலும், இந்தப் பாலம் அருகிலேயே புதிய ரயில்பாலம் கட்டும் பணிகளுக்கு 1.3.2019-ல் பிரதமர் மோடி காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார்.
சுமார் ரூ.535 கோடி மதிப்பில் பணிகள் தொடங்கின. இதனால் ராமேசுவரம் வரும் ரயில்கள் மண்டபம் ரயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டன. தற்போது புதிய பாலத்தின் பணிகள் முழுவதுமாக நிறைவடைந்து கடந்த நவம்பர் மாதம் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி ஆய்வு மேற்கொண்டார். அப்போது சில குறைபாடுகளை சுட்டிக்காட்டி அவற்றை சரிசெய்த பிறகு புதிய பாம்பன் ரயில் பாலம் வழியாக ராமேசுவரத்துக்கு ரயிலை இயக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். இதன்படி அவர் சுட்டிக் காட்டிய பணிகளும் நிறைவேற்றப்பட்டன.
மேலும், மண்டபம் வரை இயக்கப்படும் அனைத்து ரயில் களும் பராமரிப்பு பணிகளுக்காக பயணிகள் இல்லாமல் காலி ரயில் பெட்டிகள் பாம்பன் புதிய ரயில் பாலம் வழியாக ராமேசுவரம் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகளுக்காக தினமும் கொண்டு செல்லப்படுகின்றன. இந்நிலையில், புதிய ரயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைப்பதற்கான பணிகளை தெற்கு ரயில்வே தீவிரப்படுத்தி வருகிறது.
பாம்பன் புதிய ரயில் பாலத்தின் மத்தியில் செங்குத்து தூக்குப் பாலப் பணிகளால் கடந்த மே மாதத்திலிருந்து கப்பல்கள் கடந்து செல்ல தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் 9 மாதங்களுக்கு பிறகு கப்பல்கள் கடந்து செல்ல நேற்று (வெள்ளிக்கிழமை) அனுமதி அளிக்கப்பட்டது.
» டிராகன்: ப்ளஸ், மைனஸ் என்னென்ன? - முழுமையான பார்வை
» சீமானுக்கு எதிரான பாலியல் வழக்கை ரத்து செய்ய முடியாது: உயர் நீதிமன்ற தீர்ப்பின் முழு விவரம்!
கோட்ட மேலாளர் ஆய்வு: காக்கிநாடாவிலிருந்து புறப்பட்டு கொச்சி செல்வதற்காக பாம்பன் தெற்கு பாக் நீரிணை கடல் பகுதியில் காத்திருந்த சிறியரக கப்பல் ஒன்று, நேற்று பகலில் புதிய ரயில் பாலத்தில் உள்ள செங்குத்து தூக்குப் பாலமும், பழைய ரயில் பாலத்தில் உள்ள தூக்கு பாலமும் ஒரு சேர தூக்கிய பின்னர், அவற்றை கடந்து கொச்சிக்கு புறப்பட்டு சென்றன. தொடர்ந்து, தூக்குப் பாலங்கள் இறக்கப்பட்டு காலி பெட்டிகளுடன் ரயில் என்ஜின் மண்டபத்திலிருந்து ராமேசுவரத் துக்கு பாலம் வழியாக இயக்கப்பட்டது. இதனை மதுரைக் கோட்ட ரயில்வே மேலாளர் சரத் ஸ்ரீவத்சவா தலைமையிலான ரயில்வே அதிகாரிகள் பார்வையிட்டனர்.