சென்னை: இந்தியை திணிப்பதாக பிரதமர் மோடி மீது அவதூறு சுமத்தி, தமிழக மாணவர்களின் நலனை புறக்கணித்து, திமுக கீழ்த்தரமாக அரசியல் செய்வதாக பாஜக கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.
இதுகுறித்து தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் ஏஎன்எஸ். பிரசாத் வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது: மாணவர்கள், இளைஞர்களிடம் போதை கலாச்சாரம், கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் என மக்கள் வாழ தகுதியற்ற மாநிலமாக தமிழகம் மாறி வருகிறது. முதல்வர் ஸ்டாலினும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் திமுக அரசின் மீதான மக்கள் எதிர்ப்பை திசை திருப்ப ‘கெட்அவுட் மோடி’ என ஹேஷ்டேக் போட்டு விளையாடுகின்றனர்.
திராவிட மாடல் தலைவர்கள் முதல், புதிதாக கட்சி தொடங்கியவர்கள் வரை அனைவருமே தமிழகத்துக்கான மாற்றம் அல்ல; ஏமாற்றம் என்பதே உண்மை. தமிழகத்தின் அரசியல் குப்பைகளாக செயல்படும் இந்த கட்சிகளை, தமிழக மக்கள் தங்கள் மனதில் இருந்து அப்புறப்படுத்திவிட்டனர். தமிழகத்தின் வளர்ச்சியை வேரறுக்கும் இந்த மக்கள் விரோத சக்திகளுக்கு வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும்.
கட்டாய ஆட்சி மாற்றம்: இந்தியை திணிப்பதாக பிரதமர் மோடி மீது அவதூறு சுமத்தி, தமிழக மாணவர்களின் நலனைப் புறக்கணித்து, கீழ்த்தரமாக அரசியல் செய்கின்றனர். கலைக்கப்பட வேண்டிய திமுக ஆட்சியை, மோடி அரசு பெருந்தன்மையுடன் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. திமுகவினரே திருந்துங்கள். இல்லாவிட்டால், திருத்தப்படுவீர்கள். கட்டாய ஆட்சி மாற்றத்துக்கான வழியை உருவாக்காதீர்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.