இலங்கை கடற்படையினரால் ராமேசுவரம் மீனவர்கள் 10 பேர் கைது

By KU BUREAU

மன்னார் மற்றும் நெடுந்தீவு கடற்பகுதியில் தனித்தனியாக 3 விசைப்படகுகளை சிறைப்பிடித்து அதிலிருந்த 10 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற முனியேந்திரனுகு சொந்தமான விசைப்படகை இலங்கை கடற்படையினர் மன்னார் கடற்பகுதியில் புதன்கிழமை இரவு சிறைபிடித்து அதிலிருந்த ஜோதிராஜன், ராமு, அருள்ஜார், ஜான் கென்னடி ஆகிய 4 மீனவர்களை கைது செய்தனர். பின்னர் இவர்கள் தலைமன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

மேலும், ராமேசுவரத்திலிருந்து கடலுக்குச் சென்ற சூசை வியாகுலம், ஆல்ட்ரின் ஆகிய இருவருக்குச் சொந்தமான 2 விசைப்படகுகளை நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையினர் வியாழக்கிழமை அதிகாலை சிறைபிடித்தனர். அதிலிலிருந்த ஜான் முத்துக்குமார், லவ்சன், பவுல்ராஜ், அந்தோணி செல்வம், ஜான்போஸ்கோ, ஜான்ராஜ் ஆகிய 6 மீனவர்கள் கைது செய்யப்பட்டு காங்கேசன்துறை கடற்படை முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

பின்னர், தமிழக மீனவர்கள், மீன்வளத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு நீதிமன்றக் காவலில் வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் சிறைகளில் தனித்தனியாக அடைக்கப்பட்டனர்.

கடந்த ஜனவரி மாதத்திலிருந்து 13 படகுகள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு 99 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE