சென்னை: சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் பதவிக்கு நடைபெறவுள்ள நேர்முகத் தேர்வுக்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை: துணைவேந்தர்கள் பதவிக்காலத்தின் கடைசி 3 மாதங்களில் எந்த நியமனங்களையோ கொள்கை முடிவையோ எடுக்க கூடாது என்று பல்கலைக்கழகங்களுக்கு 2017-ல் தமிழக அரசு அனுப்பிய சுற்றறிக்கையில் தெளிவாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால், பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜெகநாதன் கடந்த ஆண்டு ஜூனில் ஓய்வுபெற்று தற்போது வரும் மே 19-ம் தேதி வரை பணி நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த பதவிக்காலம் முடிய 2 மாதங்கள் 18 நாட்கள் உள்ளன. அதற்கு முன்பாக பதிவாளர் பணிக்கு நேர்காணல் நடத்துவது அரசின் விதிகளை மீறியது ஆகும். ஏராளமான குற்றச்சாட்டுகள் தற்போதைய துணைவேந்தர் மீது இப்போது ஏராளமான குற்றச்சாட்டுகள் உள்ளன. அவற்றில் சில புகார்கள் மீது காவல்துறை வழக்கு பதிந்துள்ளது.
இந்நிலையில் மீதமுள்ள புகார்கள் மீது தமது செல்வாக்கை பயன்படுத்தி எந்த நடவடிக்கையும் எடுக்காமல் துணைவேந்தர் தடுத்து வருகிறார். துணைவேந்தர் பதவியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு பதிவாளர் பதவியில் நேர்மையான அதிகாரி நியமிக்கப்பட்டால், அவர் தம் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்கக்கூடும் என்பதால், தமது பதவிகாலத்திலேயே தமக்கு விசுவாசமான ஒருவரை நியமிக்க துணைவேந்தர் நினைக்கிறார்.
அதனால்தான் அவசர அவசரமாக நேர்காணலை ஏற்பாடு செய்திருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. துணைவேந்தரின் இந்த நடவடிக்கையை தடுக்காமல் அரசு வேடிக்கை பார்ப்பது ஏன்? எனவே, பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் பதவிக்கு மார்ச் 1-ம் தேதி நடை பெறவிருக்கும் நேர்முகத் தேர்வுக்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.