வணிகவரி்த் துறையில் நடப்பு நிதியாண்டில் ஜன.31ம் தேதி வரை ரூ.1,13,235 கோடி வருவாய் ஈட்ப்பட்டுள்ளதாக அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார். சென்னை, நந்தனம் ஒருங்கிணைந்த வணிகவரி (ம) பதிவுத்துறை வளாகக் கூட்டரங்கில் 2025-ம் ஆண்டு ஜனவரி மாதத்துக்கான அனைத்து இணை ஆணையர்களின் பணித்திறன் குறித்த ஆய்வுக்கூட்டம் அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் அமைச்சர் பேசியதாவது: வணிகவரித் துறையில் கடந்த 2023-24ம் நிதி ஆண்டின் 2024 ஜனவரி 31 வரையிலான வருவாய் ரூ. 1,01,234 கோடியாகும். நிகழும் 2024-25ம் நிதி ஆண்டில் இந்தாண்டு ஜன 31 வரை ஈட்டப்பட்ட வருவாய் ரூ. 1,13,235 கோடியாகும். கடந்த நிதி ஆண்டின் வருவாயுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டில் ரூ.12,001 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
மேலும் ஜிஎஸ்டி சட்டம்ப்படி, 2017-18, 2018-19 மற்றும் 2019-20 ஆகிய நிதி ஆண்டுகளுக்கு வழங்கப்பட்ட வரிவிதிப்பாணைகளில் எழுப்பப்பட்ட கேட்புகளில் நிலுவையிலுள்ள வரித்தொகையை இந்தாண்டு மார்ச் 31க்குள் செலுத்த வேண்டும்.அவ்வாறு செலுத்தினால், நிலுவையிலுள்ள வட்டி மற்றும் தண்டத்தொகையை தள்ளுபடி செய்வதற்கான திட்டம் ஜிஎஸ்டி கவுன்சில் அறிவுறுத்தல் படி தற்போது நடைமுறையில் உள்ளது. எனவே, குறிப்பிடப்பட்ட ஆண்டுகளில் வரி நிலுவை பாக்கி வைத்துள்ள சம்பந்தப்பட்ட வணிகர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, வரியை செலுத்தி, வட்டி மற்றும் தண்டத்தொகை செலுத்துவதிலிருந்து தள்ளுபடி பெறலாம். இது குறித்து ஏதேனும் சந்தேகம் இருப்பின் தங்களது கோட்ட இணை ஆணையர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு தெளிவு பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கூட்டத்தில், துறையின் செயலர் குமார் ஜயந்த், வணிக வரி ஆணையர் டி.ஜகந்நாதன், இணை ஆணையர் பூங்கொடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
» ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் இடைத்தரகருக்கு ஜாமீன்
» கனடாவில் தரையிறங்கியபோது ஏற்பட்ட விமான விபத்தில் 18 பேர் காயம்