வேலூர்: தேசிய கல்விக் கொள்கையைப் பின்பற்ற வேண்டும் என்று நிர்ப்பந்தம் செய்வது நியாயமற்றது என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார். அதிமுக இளைஞர், இளம்பெண்கள் பாசறை சார்பில் ‘இலக்கு 2026 – லட்சிய மாநாடு’ வேலூர் கோட்டை மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்றது.
இதில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பேசியதாவது: 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 234 தொகுதிகளிலும் வெற்றிபெற்று, ஆட்சிஅமைக்கும். 2008-ல் ஜெயலலிதா இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையைத் தொடங்கினார். இதன் மூலம் 30 லட்சம் இளைஞர்கள் அதிமுகவில் இணைந்தனர்.
அதிமுக அறிக்கை பாஜக அறிக்கையைப்போல இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். அதிமுக மக்களையும், தொண்டர்களையும் மட்டுமே நம்பியுள்ள கட்சி. நாங்கள் யாரையும் தேடிச் செல்ல வேண்டியதில்லை, எங்களைத் தேடித்தான் மற்றவர்கள் வருவார்கள். திமுகதான் கூட்டணிக் கட்சிகளை நம்பியுள்ளது.
கடந்த 2 மாதங்களில் மட்டும் 107 போக்சோ வழக்குகள் பதிவாகியுள்ளன. 56 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகப்பட்டுள்ளனர். 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தலைமையில் கூட்டணி அமையும். தொண்டர்கள் மற்றும் மக்களின் விருப்பம் நிறைவேற்றப்படும். தமிழகத்துக்கு ஒதுக்க வேண்டிய நிதியை மத்திய அரசு முறையாக ஒதுக்கீடு செய்ய வேண்டும். தேசிய கல்விக் கொள்கையைப் பின்பற்ற வேண்டும் என்று நிர்ப்பந்தம் செய்வது நியாயமற்றது.
தமிழக காவல் துறை ஏவல்துறையாக மாறிவிட்டது. மாநிலம் முழுவதும் போதைப் பொருட்கள் புழக்கம் அதிகரித்துள்ளது. திமுகஅரசுக்கு எதிராக விவசாயிகள்,நெசவாளர்கள், அரசு ஊழியர்கள் என அனைவரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவ்வாறு பழனிசாமி பேசினார். மாநாட்டில், முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி, குடியாத்தம் நகரச் செயலாளர் பழனி, மாவட்ட துணைச் செயலாளர் மூர்த்தி மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.