மதுரை: கரூர் திருமாநிலையூரில் புதிய பேருந்து நிலையம் கட்ட உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. புதிய பேருந்து நிலையத்தை தோரணக்கல்பட்டியில் கட்டக்கோரிய மனுக்களை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
கரூர் திருமாநிலையூரில் இரு தனி நபர்கள் தானமாக வழங்கிய 12 ஏக்கர் இடத்தில் புதிய பேருந்து நிலையம் கட்ட தமிழக அரசு 2013-ல் அரசாணை பிறப்பித்தது. திருமாநிலையூரில் பேருந்து நிலையம் கட்டுமானப் பணிகள் தொடங்கிய நிலையில், திருமாநிலையூருக்கு பதிலாக தோரணக்கல்பட்டியில் புதிய பேருந்து நிலையம் கட்ட வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பலர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குளை விசாரித்த உயர் நீதிமன்றம் திருமாநிலையூரில் பேருந்து நிலையம் கட்டுமானப் பணிக்கு இடைக்கால தடை விதித்தது.
இந்நிலையில் திருமாலைநிலையூரில் பேருந்து நிலையம் கட்ட வேண்டும் என பலர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத் தாக்கல் செய்தனர். திருமாலையூரில் பேருந்து நிலையம் கட்டும்பணிக்காக வாய்க்கால்களை சேதப்படுத்தியதற்காக கரூர் மாநகராட்சிக்கு ரூ.25 லட்சம் அபராதம் விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக கரூர் மாநகராட்சி சார்பில் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: பொதுமக்களின் நலனுக்காக பேருந்து நிலையம் அமைக்க அரசு கொள்கை முடிவெடுக்கிறது. இந்த கொள்கை முடிவுக்கு தனிநபர்கள், குழுக்கள் தெரிவிக்கும் எதிர்ப்புகள் சட்டத்தின் பார்வையில் ஏற்றுக்கொள்ள முடியாது. அப்படியானவர்கள் மீது நீதிமன்றம் எந்த கருணையும் காட்ட முடியாது. இதுபோன்ற விவகாரங்களில் நீதிமன்றம் பொதுமக்கள் பக்கம் தான் நிற்கும், தனி நபர்கள், குழுக்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் நீதிமன்றம் செயல்படாது.
» ‘பாம்பன் புதிய ரயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்’
» நீலகிரி மாவட்டத்தில் 85 அரசு பள்ளிகளை மூடும் திராவிட மாடல் அரசு: எல்.முருகன் கண்டனம்
இந்த வழக்கில் திருமாநிலையூரில் புதிய பேருந்து நிலையம் கட்டுமானப் பணி 30 சதவீதம் முடிந்த நிலையில் கட்டுமானப் பணிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்த கட்டுமானப் பணிகள் நடைபெறவில்லை. இந்த தடை நீக்கப்படுகிறது. திருமாநிலையூரில் பேருந்து நிலையம் கட்டுமானப் பணியை தொடங்கலம். தோரணக்கல்பட்டியில் பேருந்து நிலையம் கட்டக்கோரிய மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன, என்று நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.