புதுச்சேரி: பாசிக், பாப்ஸ்கோ, பிஆர்டிசி, பிடிடிசி ஆகிய 4 பொதுத்துறை நிறுவனங்களில் கடந்த 2017 முதல் 2022 வரை 5 ஆண்டுகளில் ரூ. 388.5 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக இந்திய தணிக்கைக்குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி சட்டப்பேரவையில் நிதி நிலை தணிக்கை அறிக்கைகள் தனித்தனியாக நான்கு சமர்பிக்கப்பட்டன. இது தொடர்பாக தமிழகம், புதுச்சேரி முதன்மை கணக்காய்வு தலைவர் திருப்பதி வெங்கடசாமி தலைமைச் செயலகத்தில் நேற்று செய்தியாளர் களிடம் கூறியதாவது: பாசிக் நிறுவனம் நுண்ணுயிர் உரம், பூச்சிக் கொல்லி, குப்பை உர விஷயங்களை முழுமையாக செயல்படுத்தாத காரணத்தால் ரூ. 2.14 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டது.
கடந்த 2017 முதல் 2022 வரை பாசிக் நிறுவனம் அரசு துறைகளுக்கு காய் கறிகளை மொத்த விலைக்கு தொடர்ந்து விநியோகிக்கவில்லை. இதால் ரூ.9.1 கோடி இழப்பு ஏற்பட்டது. வேளாண் விற்பனை கூடங்களை மூடுவதில் ஏற்பட்ட காலதாமத்தால் பாசிக் நிறுவனத்துக்கு ரூ. 22.89 கோடி நஷ்டம் ஏற்பட்டது.
பாசிக் நிறுவனம் 11 ஐஎம்எப்எல் உரிமங்களை புதுப்பிக்காமல் செயலற்ற நிலையில் வைத்திருந்தன. 2020-21ல் 21 உரிமங்களை புதுப்பிக்க வில்லை. மேலும் பாப்ஸ்கோ நிறுவனம் மொத்த விற்பனையாளர்களிடம் இருந்து மதுபானங்களை கொள்முதல் செய்ததன் மூலம் ரூ. 8 கோடி வருவாய் ஈட்டும் வாய்ப்பை இழந்தது.
» திருப்பூர் அதிர்ச்சி: 11 ஆண்டுகளாக ஆவணங்களின்றி தங்கியிருந்த வங்கதேச தம்பதி கைது!
» உடுமலை - மூணாறு சாலையில் ஒற்றை யானை நடமாட்டம்: அச்சத்தில் உறைந்த மக்கள்
பாசிக் நிறுவனம் கனிமநீர் ஆலையின் உற்பத்தித்திறனை குறைவாக பயன்படுத்தியது. இதனால் செலவுகளை ஈடு செய்ய முடியாமல் ரூ. 1.98 கோடி இழப்பு ஏற்பட்டது.
துத்திப்பேட்டில் உள்ள நிலத்தை புதிய ஒப்பந்தம் மூலம் குத்தகைக்கு விட நடவடிக்கை எடுக்காததால் 2017 முதல் 2022 வரை மட்டும் ரூ. 1.77 கோடி வருவாய் இழப்பு பாசிக் நிறுவனத்துக்கு ஏற்பட்டது.
பிஆர்டிசியில் புதிய பேருந்துகளை அறிமுகம் செய்யாததால் 2017-ல் கால அளவை இழந்த பேருந்துகள் 15.7 சதவீதமாக இருந்தது. இது 2021-22ல் 64.2 சதவீதமாக உயர்ந்தது. பிஆர்டிசியில் 2014 முதல் 2022 வரை 41 பேருந்துகள் இயக்கப்படவில்லை.
இவ்வாறாக பாசிக், பாப்ஸ்கோ, பிஆர்டிசி, பிடிடிசி ஆகிய 4 பொதுத்துறை நிறுவனங்களில் கடந்த 2017 முதல் 2022 வரை 5 ஆண்டுகளில் ரூ. 388.5 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தார். பேட்டியின்போது முதுநிலை துணை கணகாய்வுத் தலைவர் சுகேந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.