புதுச்சேரி: சட்டப்பேரவையில் பேரவைத் தலைவருக்கு எதிராக அவர் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட சுயேட்சை எம்எல்ஏ நேரு சஸ்பெண்ட் செய்யப்பட்டு, பேரவை காவலர்களால் வெளியேற்றப்பட்டார்.
புதுவை பேரவைத் தலைவர் செல்வம், சட்டமன்ற விதிகள், மரபுகளுக்கு எதிராக தொடர்ந்து செயல்படுவதாக கூறி அவர் மீது சுயேட்சை நேரு எம்எல்ஏ நம்பிக்கையில்லா தீர்மானத்தை சட்டப்பேரவை செயலரிடம் அளித்திருந்தார். அவரை தொடர்ந்து சுயேட்சை எம்எல்ஏக்கள் அங்காளன், சிவசங்கர் ஆகியோரும் நம்பி்க்கையில்லாத தீர்மானத்தை அளித்திருந்தனர். இந்த தீர்மானத்தை சட்ட விதிகளின்படி விவாதத்திற்கு அனுமதிப்பேன் என பேரவைத் தலைவர் செல்வம் கூறியிருந்தார்.
ஆனால் இன்றைய சட்டமன்ற அலுவல் பட்டியலில் இது இடம்பெறவில்லை. இந்நிலையில் புதுவை சட்டப்பேரவை இன்று காலை கூடியது. பேரவைத் தலைவர் செல்வம் திருக்குறள் வாசித்து பேரவை நிகழ்வுகளைத் தொடக்கினார். அப்போது ஆளுங்கட்சி ஆதரவு சுயேட்சை எம்எல்ஏ நேரு, பேரவைத் தலைவர் மீது தான் தந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்ளாத பேரவைத் தலைவருக்கு தகுதியில்லை என சத்தத்துடன் பேசினார்.
தொடர்ந்து பேரவை நிகழ்வுகள் நடந்ததால், பேரவைத்தலைவர் இருக்கை முன்பு தரையில் அமர்ந்து சுயேட்சை எம்எல்ஏ நேரு தர்ணாவில் ஈடுபட்டு கோஷம் எழுப்பினார். இதனிடையே பேரவைக்கு வெளியே தர்ணாவில் ஈடுபட்டிருந்த பாஜக எம்எல்ஏ-க்களும், ஆதரவு அளிக்கும் சுயேச்சை எம்எல்ஏக்களும் பேரவைக்குள் நுழைந்தனர்.
» அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு: தலைமை கழக நிர்வாகிகள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தார் ஓபிஎஸ்!
» ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்: அறநிலையத்துறை அறிவிப்பு
அப்போது பேரவைத்தலைவர் இருக்கை முன்பு தர்ணா செய்த நேரு எம்எல்ஏ, பேரவைத்தலைவர் மீது நம்பிக்கையி்ல்லா தீர்மானம் ஏற்கெனவே அளித்த பாஜக ஆதரவு சுயேச்சை எம்எல்ஏக்கள் அங்காளன், சிவசங்கர் ஆகியோரை அழைத்தார்.
அவர்களும் நேரு எம்எல்ஏவுடன் பேரவைத்தலைவர் இருக்கை முன்பாக சென்றனர். தொடர்ந்து பேரவைத்தலைவர் செல்வம் நிகழ்வுகளை நடத்தினார்.
இரங்கல் தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சி தலைவர் சிவாவை பேச பேரவைத்தலைவர் அழைத்தார். அப்போது நேரு எம்எல்ஏ, சட்டமன்றங்களில் எதிர்க்கட்சி தலைவர்தான் சக உறுப்பினர்களின் உரிமைகளை பெற்று தருகின்றனர் என பேசினார்.
இதையடுத்து எதிர்க்கட்சி தலைவர் சிவா, பேரவைத் தலைவர் செல்வத்திடம், அவையை தொடர்ந்து நடத்த ஏதாவது ஒரு முடிவு எடுங்கள். எங்கள் உரிமைகள் மீறப்படுகிறது. சொந்த பிரச்சினைகளுக்காக உங்களுக்கு ஆதரவாக செயல்பட முடியாது. அரசுக்கு ஆதரவு தருகிறீர்கள், பேரவைத்தலைவர் எதிர்க்கிறீர்கள், இது தவறான போக்கில்லையா என்று குறிப்பிட்டார்.
அப்போது நேரு எம்எல்ஏ தொடர்ந்து கோஷம் எழுப்பினர். அவருக்கு ஆதரவாக சுயேட்சை எம்எல்ஏக்கள் அங்காளன், சிவசங்கரும் பேசினர். இதையடுத்து பேரவைத் தலைவர் செல்வம், சட்ட விதிகளுக்கு எதிராக செயல்படும் நேரு எம்எல்ஏவை கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். அவையிலிருந்து வெளியேற்றுங்கள் என்று பேரவைக் காவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து பேரவைக் காவலர்கள் நேரு எம்எல்ஏவை வெளியேற்றினர். மற்ற 2 பாஜக ஆதரவு சுயேட்சை எம்எல்ஏக்களும் தங்கள் இருக்கைக்கு வந்து அமர்ந்தனர்.