இபிஎஸ்சுக்கு சிக்கல்? - அதிமுக வழக்கை தேர்தல் ஆணையம் விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

By KU BUREAU

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் பதவி, சின்னம் உள்ளிட்ட விவகாரத்தில் தேர்தல் ஆணைய விசாரணைக்கு தடை விதிக்க கோரி எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

அதிமுக பொதுச்செயலாளராக பழனிசாமியை தேர்ந்தெடுத்தது உள்ளிட்ட அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஏற்கக் கூடாது எனவும், உரிமையியல் வழக்குகள் முடிவுக்கு வரும் வரை கட்சிக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கக் கூடாது எனவும் கோரிக்கை விடுத்து அனுப்பப்பட்ட மனுக்களை தேர்தல் ஆணையம் விசாரிக்க தடை விதிக்க கோரி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், தேர்தல் ஆணைய விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்த தடையை நீக்க கோரி முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும், முன்னாள் எம்.பி.யுமான ரவீந்திரநாத் மற்றும் புகழேந்தி, கே.சி.பழனிச்சாமி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்கள் நீதிபதிகள் ஆர். சுப்பிரமணியன் மற்றும் ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தேர்தல் ஆணைய விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவிட்டனர்.

தேர்தல் ஆணையம், சின்னம் ஒதுக்கீட்டு விதிகளின் அடிப்படையில் விசாரணையை தொடர அனுமதித்த நீதிபதிகள், மனுக்களை விசாரிக்க அதிகாரம் உள்ளதா? என்பது குறித்து திருப்தியடைந்த பிறகே விசாரணையை துவங்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டனர்.மேலும், தேர்தல் ஆணைய விசாரணைக்கு தடை விதிக்கக் கோரிய எடப்பாடி பழனிச்சாமியின் மனுவை தள்ளுபடி செய்து பிறப்பிக்கப்பட்டுள்ள உயர் நீதிமன்ற உத்தரவு, அவருக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE