கோவை: ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் 'ட்ரோன்' கேமரா பயன்படுத்தும் சுற்றுலா பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதிக்குள் வால்பாறை அமைந்துள்ளது. இங்குள்ள வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய வனச்சரகங்களுக்குட்பட்ட அட்டகட்டி வியூ பாயின்ட், வாட்டர் ஃபால்ஸ், நல்லமுடி காட்சிமுனை, சின்னக்கல்லார் நீர்வீழ்ச்சி, கூழாங்கல் ஆறு, கவர்க்கல் வியூ பாயின்ட் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் அத்துமீறி வனப் பகுதிக்குள் செல்வதை தடுக்க, வனச்சரக அலுவலர்கள் வெங்கடேஷன், கிரிதரன் ஆகியோர் தலைமையில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகள் வனப்பகுதிக்குள் அத்துமீறி செல்வதையும், வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதியில் ட்ரோன் கேமரா பயன்படுத்துகின்றனரா என்பதையும் வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, "வால்பாறையை ரசிக்க வரும் சுற்றுலா பயணிகள், தடை செய்யப்பட்ட வனத்துக்குள் அத்துமீறி நுழையவோ, வன விலங்குகளை துன்புறுத்தவோ கூடாது. மலைப்பகுதியில் யானைகள் நடமாட்டம் உள்ளதால், மாலை 6 மணிக்கு மேல் ஆழியாறு சோதனைச்சாவடி வழியாக வால்பாறைக்கு இருசக்கர வாகனங்களில் வருவதற்கு அனுமதியில்லை. இயற்கைக்கும், வன விலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்ல வேண்டும்.
» வியாசர்பாடி ஜீவா - கடற்கரை வழித்தடத்தில் பராமரிப்பு பணியால் ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் அவதி
» செங்கோட்டையன் அதிமுகவுக்கு எதிராக பேசவில்லை: செல்லூர் ராஜு விளக்கம்
ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட எந்த ஒரு பகுதியிலும் சுற்றுலா பயணிகள் 'ட்ரோன்' கேமரா பயன்படுத்தக்கூடாது. மீறினால் அபராதம் விதிப்பதோடு, கேமராவும் பறிமுதல் செய்யப்படும்" என்றனர்.