இலங்கை அரசால் நாட்டுடமையாக்கப்பட்ட தமிழக மீனவர்களின் படகு ஏலம்

By KU BUREAU

இலங்கை கடல் பகுதியில் சிறைபிடிக்கப்பட்ட தமிழக படகு ஒன்று அந்நாட்டு நீதிமன்றத்தால் ஏலம் விடப்பட்டது.

நாகை மாவட்டம் கோடியக்கரை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற ஃபைபர் படகில் 4 மீனவர்கள் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை கடல் பகுதியில் கடந்த 2022 டிச. 27-ம் தேதி அந்நாட்டு மீனவர்களால் சிறைபிடிக்கப்பட்டனர். பின்னர், அவர்களை போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

வல்வெட்டித்துறை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, பருத்தித்துறை நீதிமன்றம் 4 மீனவர்களை மட்டும் விடுதலை செய்து, ஃபைபர் படகையும், அதிலிருந்த உபகரணங்களையும் நாட்டுடமையாக்கியது.

இந்நிலையில், நாட்டுடமையாக்கப்பட்ட படகு, மோட்டார், வலைகள், நங்கூரம், குளிர்சாதனப் பெட்டி, ஜிபிஎஸ் கருவி ஆகியவை பருத்தித் துறை நீதிமன்ற வளாகத்தில் ஏலம் விடப்பட்டது. இவை மொத்தம் இலங்கை ரூபாய் 5 லட்சத்து 60 ஆயிரத்து 100-க்கு (இந்திய ரூபாய் மதிப்பில் 1 லட்சத்து 65 ஆயிரம்) பகிரங்க ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டது.

இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் படகுகளை மீட்டுத்தர வேண்டுமென மீனவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட படகு ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டுள்ளது தமிழக மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE