சென்னை:அமெரிக்காவில் இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்க தவறியதாக மத்திய பாஜக அரசை கண்டித்து கை, கால்களில் விலங்கிட்டு சென்னையில் நேற்று காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அமெரிக்காவில் உரிய அனுமதி இன்றி வசித்து வந்ததாக 104 இந்தியர்களை கை, கால்களில் விலங்கிட்டு அந்நாட்டு அரசு வெளியேற்றிய சம்பவத்தை குறிப்பிட்டு இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமைகளை மத்திய அரசு பாதுகாக்க தவறிவிட்டது. இந்த விவகாரத்தில் அமெரிக்காவை மத்திய அரசு கண்டிக்கவில்லை எனக்கூறி, மத்திய பாஜக அரசை கண்டித்து தமிழக காங்கிரஸ் சார்பில் சென்னை அண்ணாசாலையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் கை, கால்களில் விலங்கிட்டு தரையில் அமர்ந்து நூதன முறையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய பாஜக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் செல்வப்பெருந்தகை கண்டன உரையாற்றியதாவது:
நமது இந்தியர்களை கைவிலங்கிட்டு வெளியேற்றிய அமெரிக்காவை கண்டித்து எந்தவித கண்டன அறிக்கைகளையோ, அமெரிக்கா செய்வது தவறு என்றோ சுட்டிக் காட்டாமல் பிரதமர் போடி மவுனம் காக்கிறார். இதுவரை அமெரிக்க தூதரை அழைத்து கூட கண்டனத்தை தெரிவிக்கவில்லை. உரிய அனுமதி இன்றி இந்தியாவில் தங்கும் வெளிநாட்டினரை, இந்தியா இவ்வாறு நடத்தியதில்லை.
» மேஷம் முதல் மீனம் வரை இன்றைய ஒரு வரி ராசிபலன் @ பிப். 08, 2025
» ராணுவத்துக்கு ரூ.10,147 கோடியில் பினாகா ராக்கெட் வாங்க ஒப்பந்தம்
அந்நாட்டின் காவல்துறை தலைவர், இந்தியர்களை இந்த உலகத்தின் ஏலியன்கள் என்று சொல்கிறார். அதையும் மோடி கண்டிக்கவில்லை. இந்தியர்களுக்கு விலங்கிட்டதை, நாட்டுக்கு ஏற்பட்ட தலைகுனிவாக பார்க்கிறோம். வெளியுறவு கொள்கையில் இந்தியா தோல்வி அடைந்துள்ளது. பாஜக அரசு, அமெரிக்காவிடம் தனது கண்டனத்தை பதிவு செய்ய வேண்டும். ராஜிய ரீதியான உறவுகளை முறிக்க வேண்டும்.
மன்மோகன் சிங் ஆட்சியில் எதிர்வினை ஆற்றியது போல் இவர்களால் எதிர்வினை ஆற்ற முடியவில்லை. அமெரிக்கா தவறு செய்திருக்கிறது என்பதை இவர்களால் பதிவு செய்ய முடியவில்லை இதை வன்மையாக காங்கிரஸ் கண்டிக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அசன் மவுலானா எம்எல்ஏ, மாநில துணைத் தலைவர் சொர்ணா சேதுராமன், பொதுச்செயலாளர் டி.செல்வம், மாவட்ட தலைவர்கள் சிவ.ராஜசேகரன், டில்லி பாபு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.