சென்னை: அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மலைபிரதேசங்களில் மதுபாட்டில்களை வீசிச் செல்வதால் விலங்கினங்கள் பாதிக்கப்படுவது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வு, டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபான பாட்டிலுக்கு ரூ.10 அதிகமாக விற்கவும், திருப்பித் தரப்படும் காலி பாட்டிலுக்கு ரூ.10 திருப்பிக் கொடுக்கவும் வகை செய்யும் திட்டத்தை அமல்படுத்த உத்தரவிட்டது. இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சுற்றுலா தளங்களில் உள்ள மதுபானக் கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்ப பெறுவது தொடர்பாக டாஸ்மாக் நிறுவனம் சார்பில் அறிக்கை அளிக்கப்பட்டது.
அதில், "தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இத்திட்டம் முழுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது. 7 மாவட்டங்களில் பகுதிவாரியாக அறிமுகப்படுத்தப் பட்டு மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட மாவட்டங்களில் 97 சதவீத பாட்டில்கள் திரும்ப பெறப்பட்டுள்ளது. பாட்டில்களைத் திரும்ப பெறும் திட்டம் ஏப்ரல் முதல் தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், தமிழகம் முழுவதும் ஏப்ரல் மாதம் முதல் இத்திட்டம் அமல்படுத்துவதை ஏற்கிறோம். மது பாட்டில்களுக்கு கூடுதலாக பெறப்பட்ட பணத்தை தமிழகத்தின் முக்கிய பிரச்சினையாக இருக்கும் நீர்நிலை மற்றும் வன மேம்பாட்டுக்காக பயன்படுத்தும் வகையில் அரசு வழக்கறிஞர்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என தெரிவித்தனர்.
» ஆளுநர் மாநில அரசுக்கு கட்டுப்பட வேண்டும் என பிரதமர் ஒத்துக்கொள்கிறார்: அமைச்சர் ரகுபதி கேள்வி!
» போராட்டம், போலீஸ் குவிப்பால் திருப்பரங்குன்றம் மக்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!
பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்துடன் பாட்டில்களின் மூடியை மாற்றுவதா? அல்லது திரும்ப பெறுவதா? என தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஏப்ரல் 3ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.