சென்னை: திராவிட மண்ணில் பிரிவினை ஏற்படுத்த முயற்சிக்கும் பாஜகவை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் நேற்று நடந்தது தேவையற்ற போராட்டம். ஆட்சிக்கு அபாயத்தை உருவாக்கும் வகையில் பாஜக போராட்டம் நடத்தியது. திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் பாஜக செயல்படுகிறது. அரசியல் மற்றும் தேர்தல் லாபத்திற்காக பாஜக நாடகம் நடத்துகிறது. திருப்பரங்குன்ற விவகாரத்தை வைத்து அரசியல் செய்ய நினைக்கும் பாஜகவின் முயற்சி ஒருபோதும் நிறைவேறாது.
தமிழ்நாட்டில் சமூக நல்லிணக்கத்தை கெடுக்கும் நோக்கில் பாஜக செயல்படுகிறது. தமிழ்நாட்டில் அனைத்து மதத்தினரும் ஒற்றுமையோடு இருக்கின்றனர். ஒற்றுமையாக உள்ள மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த பாஜக முயற்சி செய்து வருகிறது. இனத்தால், மதத்தால், மொழியால் பிரச்சினையை ஏற்படுத்துவதே ஹெச்.ராஜாவின் நோக்கம்.
திராவிட மண்ணில் பிரிவினை ஏற்படுத்த முயற்சிக்கும் பாஜகவை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம். முதல்வரிடம் அனுமதி பெற்று திருப்பரங் குன்றம் சென்று விரைவில் ஆய்வு செய்யவுள்ளேன்" என்று சேகர் பாபு தெரிவித்தார்.
» வடலூர் வள்ளலார் பெருவெளியில் வெட்டி வீழ்த்தப்படும் மரங்கள்: சீமான் கண்டனம்
» தங்கம் விலை திகுதிகு உயர்வு; ரூ.63 ஆயிரத்தை கடந்தது சவரன் - இன்று கிராமுக்கு ரூ.95 உயர்வு!