அண்ணா நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை: அமைதிப் பேரணியில் திரண்ட திமுகவினர்!

By KU BUREAU

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாவின் நினைவு தினத்தை ஒட்டி திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின், அண்ணா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாவின் 56-வது நினைவு நாள் இன்று (பிப்.3-ம் தேதி) அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி வாலாஜா சாலையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகை அருகில் இருந்து புறப்பட்டு, அண்ணா நினைவிடம் வரை நடைபெற்ற அமைதிப் பேரணியில் முதல்வர் ஸ்டாலின், திமுக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், திமுக பொருளாரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலு மற்றும் அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

இதனையடுத்து திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், கட்சியின் பொதுச் செயலாளர் துரை முருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் காமராஜர் சாலையில் அமைந்துள்ள அண்ணா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்தும், மலர்களைத் தூவியும் மரியாதை செலுத்தினர். தொடர்ந்து மெரினாவில் அமைந்துள்ள கருணாநிதி நினைவிடத்திலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE