மக்களின் குறைகளை உடனே தீர்க்க முயற்சி செய்யுங்கள்: கலெக்டர்களுக்கு முதல்வர் அறிவுரை

By KU BUREAU

சென்னை: அரசு அலுவலகங்களுக்கு வரும் மக்களிடம் கனிவுடன் நடந்து கொண்டு, அவர்களின் குறைகளை அங்கேயே தீர்த்து வைக்க முயற்சி எடுக்க வேண்டும் என்று புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர்களான ஆர்.சதீஷ் (தருமபுரி), எஸ்.சரவணன் (திண்டுக்கல்), எம்.பிரதாப் (திருவள்ளூர்), சி.தினேஷ் குமார் (கிருஷ்ணகிரி), எஸ்.சேக் அப்துல் ரகுமான் (விழுப்புரம்), கே.தர்பகராஜ் (திருவண்ணாமலை), வி.மோகனசந்திரன் (திருப்பத்தூர்), டாக்டர் ஆர்.சுகுமார் (திருநெல்வேலி), கே.சிவசவுந்தரவள்ளி (திருவாரூர்) ஆகியோர் நேற்று சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

அப்போது அவர்களிடம் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: மக்களுடன் நேரடித் தொடர்பில் களத்தில் இருக்கப்போகும் நீங்கள், அரசின் முத்திரை திட்டங்கள், அன்றாடம் செயல்படுத்தும் திட்டங்கள், மக்கள்நலத் திட்டங்கள், இவற்றுக்கெல்லாம் முத்தாய்ப்பாக, அடிப்படை தேவைகளை நிறைவேற்ற வேண்டிய திட்டங்களில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். அரசு அலுவலகங்களுக்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

மேலும், மக்கள் குறைதீர்ப்பு முகாம் மனுக்கள் மீதும், முதல்வரின் முகவரி மனுக்கள் மீதும் சிறப்பு கவனம் செலுத்தி, தீர்வு காண வேண்டும். அரசு அலுவலகங்களுக்கு வரும் மக்களிடம் கனிவுடன் நடந்து கொண்டு, அவர்களின் குறைகளை அங்கேயே தீர்த்து வைப்பதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும்.

சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுடன் மாவட்டங்களில் உள்ள பிரச்சினைகள் குறித்து கலந்து ஆலோசித்து தீர்வுகாண வேண்டும். ஒவ்வொரு மாவட்டமாகத் தொடர்ந்து நான் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மக்களைச் சந்திக்கின்றபோது, அவர்கள் எங்கள் மாவட்ட ஆட்சியர் சிறந்த மாவட்ட ஆட்சியர் என்று பாராட்டும் படியாக பணியாற்ற வேண்டும்.

மக்களின் பாராட்டைப் பெற்ற முதல்வரின் காலை உணவுத் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் போன்றவற்றின் செயல்பாடுகளை நேரடியாக களத்துக்குச் சென்று ஆய்வு செய்ய வேண்டும். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், புதுமைப் பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம் போன்ற திட்டங்களை கவனமாகக் கண்காணித்து தகுதியுள்ள ஒவ்வொருவருக்கும் அத்திட்டங்கள் சென்று சேர்வதை உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து, மாவட்ட ஆட்சியராகப் பணியாற்ற இருக்கும் அனைவருக்கும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் முதல்வர் தெரிவித்தார். இந்த நிகழ்வின்போது, தலைமைச் செயலாளர் முருகானந்தம், பொதுத் துறை செயலாளர் ரீட்டா ஹரீஷ் தக்கர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE