அனைத்து பத்திரப் பதிவு அலுவலகங்களும் இன்று செயல்பட தமிழக அரசு உத்தரவு

By KU BUREAU

பத்திரப் பதிவு அலுவலகங்கள் இன்று (பிப்.2) ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணி முதல் பதிவு முடியும் வரை செயல்படும் என்று பத்திரப் பதிவுத் தலைவர் தெரிவித்துள்ளர்.

இது குறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: "2024-25ம் நிதியாண்டில் கடந்தாண்டு டிச.5ம் தேதி ஒரே நாளில் இதுவரையில் இல்லாத அளவில் அரசுக்கு ரூ.238.15 கோடி வருவாய் பதிவுத் துறையில் ஈட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து, கடந்த கடந்த ஜன.31ம் தேதி 23,061 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு, இதே நிதியாண்டில் இரண்டாவது முறையாக அரசுக்கு ரூ.231.51 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு நாள் வருவாய் வசூலில் இரண்டாவது முறையாக இதே நிதியாண்டில் அதிக வசூல் செய்து புதிய மைல்கல்லை பதிவுத் துறை எட்டியுள்ளது.

மேலும், பொதுமக்களின் நலன் கருதி அசையா சொத்து குறித்த ஆவணப் பதிவுகளை மங்களகரமான நாட்களில் மேற்கொள்ள பொதுமக்கள் விரும்புவதால் பொது விடுமுறை நாளான பிப்.2ம் தேதி ஞாயிற்றுக் கிழமை ஆவணப் பதிவுகள் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே ஆவணப் பதிவுகள் மேற்கொள்ள பதிவு அலுவலகங்களை காலை 10 மணி முதல் ஆவணப் பதிவு முடியும் வரை செயல்பாட்டில் வைத்திட அனைத்து பதிவு அலுவலகங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த விடுமுறை நாளில் மேற்கொள்ளப்படும் ஆவணப் பதிவுகளுக்கு விடுமுறை நாள் ஆவணப் பதிவிற்கான கட்டணம் சேர்த்து வசூலிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த விடுமுறை நாளான ஞாயிற்றுக் கிழமையில் பணி செய்யும் பதிவுத் துறை பணியாளர்களுக்கு மாற்று விடுப்பு வழங்கப்படும். மேலும், மங்களகரமான நாளான பிப்.3ம் தேதி அதிகளவில் பத்திரப் பதிவுகள் நடைபெறும் என்பதால் கூடுதலாக முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யுமாறு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன.

இதனை ஏற்று பிப்.3ம் தேதி ஒரு சார் பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகளும் இரண்டு சார் பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு வில்லைகளும் அதிக அளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்குபதிலாக 150 சாதாரண முன்பதிவு வில்லைகளோடு ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு வில்லைகளுடன் கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு வில்லைகளும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது” இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE