புளியந்தோப்பு பகுதியில் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை!

By KU BUREAU

சென்னை: புளியந்தோப்பு காவல் மாவட்டத்தில் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றவாளிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.5,000/- அபராதம் விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இது தொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ 2020ம் ஆண்டு, சென்னை பெருநகர காவல், புளியந்தோப்பு காவல் மாவட்டத்தில் வசித்து வந்த 7 வயது சிறுமிக்கு ஒரு நபர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளதாக, மேற்படி சிறுமியின் தந்தை கொடுத்த புகார் மீது எம்.கே.பி நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ மற்றும் இ.த.ச. சட்டப்பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 24 வயது (2020ம் ஆண்டு) நபரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்,

இவ்வழக்கு, காவல்துறையினரால் முறையாக விசாரிக்கப்பட்டு, இறுதி அறிக்கை தயார் செய்து, நீதிமன்றத்தில் தொடர்ச்சியாக சாட்சிகள் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற வழக்கு விசாரணை முடிவடைந்து, சென்னை, உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் இறுதி தீர்ப்பு நேற்று (31.01.2025) அன்று வழங்கப்பட்டது.

இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட மேற்படி எதிரி மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால், எதிரிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.5,000/- அபராதமும், அபராதம் செலுத்த தவறினால் மேலும் 1 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அவர்கள் தீர்ப்பு வழங்கினார்.

மேற்படி வழக்கில் சிறப்பாக புலனாய்வு செய்து, நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தி குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்று தந்த எம்.கே.பி நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர், மற்றும் நீதிமன்ற அலுவல் பணிபுரியும் காவல் குழுவினரை உயரதிகாரிகள் வெகுவாகப் பாராட்டினர்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE