எண்ணூர் கடற்பகுதியில் மீன்பிடி படகு கவிழ்ந்து மீனவர் உயிரிழப்பு

By இரா.நாகராஜன்

திருவள்ளூர்: எண்ணூர் கடற்பகுதியில் மீன்பிடி படகு கவிழ்ந்து மீனவர் உயிரிழந்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எண்ணூர் தாழங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் அரிகிருஷ்ணன் (58). இன்று அவர் அதிகாலை எண்ணூர் பகுதியைச் சேர்ந்த சகமீனவர்களான ராஜா, ஆகாஷ், தேவராஜ் ஆகியோருடன் பைபர் படகில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றார். அப்போது, எண்ணூர் முகத்துவாரம் அருகே கடற்பகுதியில் கடல் சீற்றம் காரணமாக ராட்சத அலைகளில் சிக்கி படகு கவிழ்ந்தது. இதனால், கடலில் விழுந்த ராஜா, ஆகாஷ், தேவராஜ் ஆகிய மூவரும் நீந்தி கரையை அடைந்தனர்.

ஆனால், நீரில் மூழ்கிய அரிகிருஷ்ணன் ராட்சத அலையால் தூக்கி வீசப்பட்டு, பாறையில் அடிபட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்த எண்ணூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து, அரிகிருஷ்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE