திருவள்ளூர்: மழையால் நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் பூண்டி ஏரியிலிருந்து உபரி நீர் நேற்று மதியம் முதல் திறக்கப்பட்டு வருகிறது. இதனால், கொசஸ்தலை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் அருகே உள்ள பூண்டி ஏரி, சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றாக விளங்குகிறது.
இந்த ஏரியில், கொசஸ்தலை ஆற்றுநீர், பூண்டி ஏரியை ஒட்டியுள்ள ஆந்திர மலைப்பகுதிகள் மற்றும் தமிழக வனப்பகுதிகள் உள்ளிட்டவை அடங்கிய நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழைநீர், தெலுங்கு கங்கை திட்ட ஒப்பந்தப்படி, ஆந்திர அரசு வழங்கும் கிருஷ்ணா நீர் ஆகியவை சேமிக்கப்பட்டு, பிறகு கால்வாய்கள் மூலம் புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சமீபத்தில் ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழக- ஆந்திர எல்லை பகுதிகளில் பெய்த மழையால் நீர் பிடிப்பு பகுதிகளில் இருந்து மழை நீர் மற்றும் கிருஷ்ணா நீர் பூண்டி ஏரிக்கு ஏற்கெனவே வந்து கொண்டிருக்கிறது. இச்சூழலில், நேற்று முன் தினம் முதல் திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் பூண்டி ஏரிக்கு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து வரும் மழை நீரின் அளவு நேற்று காலை முதல் அதிகரித்த வண்ணம் உள்ளது.
நேற்று பகல் 12 மணி நிலவரப்படி, பூண்டி ஏரிக்கு மழை நீர் விநாடிக்கு 3,400 கன அடி வந்து கொண்டிருந்தது. மேலும், கிருஷ்ணா நீர், ஆரணி ஆற்று நீர் விநாடிக்கு 460 கன அடி வந்து கொண்டிருந்தது. ஆகவே, 3,231 மில்லியன் கன அடி கொள்ளளவு மற்றும் 35 உயரம் கொண்ட பூண்டி ஏரியின் நீர் இருப்பு, 2,914 மில்லியன் கன அடியாகவும், நீர் மட்ட உயரம், 34.29 அடியாகவும் இருந்தது.
» தொடர் மழை: தாடகை நாச்சியம்மன் கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு தடை - வனத்துறை உத்தரவு
» நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம்: தனி விமானத்தில் பறந்த விஜய், த்ரிஷா!
எனவே, பூண்டி ஏரியின் பாதுகாப்பு கருதி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த ஏரியில் நேற்று மதியம் 1.30 மணியளவில், விநாடிக்கு 1,000 கன அடி உபரி நீரை, நீர்வள ஆதாரத் துறையின் கொசஸ்தலை ஆறு வடிநிலக் கோட்ட செயற்பொறியாளர் அருண்மொழி முன்னிலையில், நீர்வளத் துறை களப்பணியாளர்கள் திறந்தனர்.
இந்நிகழ்வில், பூண்டி உதவி பொறியாளர் அகிலன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். தொடர்ந்து, நீர் வரத்து அதிகரித்து வந்ததால், நேற்று மாலை 5 மணியளவில், பூண்டி ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு விநாடிக்கு 5 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது.
பூண்டி ஏரியிலிருந்து திறக்கப்பட்டுள்ள உபரி நீர், தாமரைப்பாக்கம், காரனோடை உள்ளிட்ட பகுதிகள் வழியாக சுமார் 65 கிமீ பயணித்து, எண்ணூர் பகுதியில் வங்காள விரிகுடா கடலில் கலக்கும். ஆகவே, பூண்டி ஏரியில் வெளியேற்றப்படும் உபரி நீர் வெளியேறுவதால், தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீர் வரத்து அதிகரித்ததால், நேற்று மாலை நிலவரப்படி, 281 அடி உயரம் கொண்ட பிச்சாட்டூர் அணையின் நீர்மட்டம் 280.80 அடியாக உள்ளது.
ஆகவே, இந்த அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவை விநாடிக்கு 5,600 கன அடியாக அதிகரித்துள்ளனர் ஆந்திர நீர் வளத் துறை அதிகாரிகள். இதையடுத்து ஆரணி கரையோரம் உள்ள பேரண்டூர், பேரிட்டிவாக்கம், காரணி, புதுவாயல், ஏலியம்பேடு, லட்சுமிபுரம், காட்டூர், ஆண்டார்மடம் உள்ளிட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.