இலங்கை சிறை​யில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 9 பேர் விடுதலை

By KU BUREAU

ராமேசுவரம்: இலங்கை சிறை​யில் அடைக்​கப்​பட்​டு இருந்த தமிழக மீனவர்கள் 9 பேரை நிபந்​தனை​யுடன் விடுதலை செய்​தும், விசைப்​படகு ஓட்டுநருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்​தும், உயிர் இழந்த அந்நாட்டு கடற்படை வீரருக்கு இழப்​பீடு வழங்க வேண்​டும் எனவும் இலங்கை மல்லாகம் நீதி​மன்றம் உத்தர​விட்​டுள்​ளது.

கடந்த ஜூன் 25-ம் தேதி நாகை மாவட்டம் அக்கரைப்​பேட்​டையைச் சேர்ந்த ஆனந்தன் என்பவருக்​குச் சொந்​தமான விசைப்​படகை பறிமுதல் செய்த இலங்கை கடற்​படை​யினர், எல்லைத் தாண்டி வந்து மீன் பிடித்ததாகக் கூறி படகி​லிருந்த மீனவர்கள் முத்​துசெட்டி (70), அவரது மகன்கள் மதி (38), ராஜேஷ் (35) மற்றும் வைத்​தி​யநாதன் (45), வானவன்​மாதேவி கலைமுருகன் (25), கீச்​சாங்​குப்பம் கோவிந்​தசாமி (60), கடலூர் மணிபாலன் (55) உள்ளிட்ட 10 பேரை கைது செய்​தனர்.

கைது நடவடிக்கை​யின்​போது, இலங்கை ரோந்​துப் படகில் இருந்த அந்நாட்டு கடற்படை வீரர் ரத்நாயக்க, பறிமுதல் செய்​யப்​பட்ட மீனவர்​களின் படகி​லிருந்து தவறி விழுந்​த​தில், பலத்த காயமடைந்​தார். மருத்​துவ​மனைக்கு கொண்​டு​செல்​லும் வழி யில் அவர் உயிரிழந்​தார். இது தொடர்​பாக, காங்​கேசன் துறை காவல் நிலை​யத்​தில் வழக்கு பதிவு செய்​யப்​பட்​டது.

இந்நிலை​யில், இந்த வழக்கு நேற்று முன்​தினம் மல்லாகம் நீதி​மன்​றத்​தில் விசா​ரணைக்கு வந்தது. வழக்கை விசா​ரித்த நீதிபதி, 10 மீனவர்​களில் 9 பேரை மீண்​டும் இலங்கை கடற்​பரப்​பில் மீன் பிடித்​தால் சிறை தண்டனை விதிக்​கப்​படும் என்ற நிபந்​தனை​யுடன் விடுதலை செய்​தார். விசைப்​படகு ஓட்டுநருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்​தார். மேலும், உயிரிழந்த கடற்படை வீரருக்கு இழப்​பீடாக ரூ.35 லட்​சம் (இந்​திய ம​திப்​பில் ரூ.10 லட்​சம்) வழங்க வேண்​டும் என​வும் உத்​தர​விட்​டார்​.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE