உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கியதன் மூலம் திமுக குடும்ப ஆட்சி நிரூபணம்: அண்ணாமலை கருத்து

By KU BUREAU

சென்னை/கோவை: விஜய்யின் அரசியல் வருகை கண்டு பாஜக பயப்படாது. உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி கொடுத்ததிலேயே திமுகவின் குடும்ப ஆட்சி நிரூபணமாகி உள்ளது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியல் படிப்பை முடித்துவிட்டு, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று மதியம் லண்டனில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு பாஜகவினர் வரவேற்பு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறியதாவது: ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் அரசியல் மற்றும் சர்வதேச உறவு என்ற துறை சார்பில் நடத்தப்பட்ட கல்வி உதவித் திட்டத்தில் சேர்ந்து 3 மாத காலம் படித்தேன். நோபல் பரிசு வென்றவர்கள், முன்னாள் இங்கிலாந்து பிரதமர்கள் எனக்கு பாடம் எடுத்திருக்கிறார்கள். இந்த 3 மாதம் என்பது என்னை சீர்படுத்திக்கொள்ளவும் குறைகளை சரி செய்வதற்கும் ஒரு வாய்ப்பாக அமைந்தது.

திரைத்துறையில் உச்சத்தில் இருக்கும்போதே, அரசியலில் கால் பதித்த நடிகர் விஜய்யை வரவேற்கிறோம். அவர் முழுநேர அரசியலுக்கு வந்து, அவரது கருத்துகளை முன்வைக்கும்போது, பாஜகவும் தனது கருத்துக்களை மக்கள் முன்பு வைக்கும். திராவிட கட்சிகளின் சித்தாந்தத்தைதான் விஜய்யும் பேசுகிறார். அவரது கொள்கை கிட்டத்தட்ட திராவிட கட்சிகளோடு தான் ஒத்துப்போகிறது. புதிதாக அரசியலுக்கு வருபவர்களை கண்டு பாஜக எப்போது பயப்படாது. நடிப்பு என்பது வேறு. அரசியல் களம் என்பது வேறு. அக்.28-ம் தேதிக்கு பிறகு நடிகர் விஜய் எத்தனை முறை வெளியே வந்திருக்கிறார். அவரை கேள்விக் கேட்க வேண்டிய இடத்தில் நாங்கள் கேள்வி கேட்போம். இன்றைய சூழலில் திராவிட கட்சிகளின் வாக்குகள் மூன்றாக பிரிந்திருக்கிறது. பாஜகவின் வாக்கு அதிகரித்து வருகிறது.

திமுக எப்போதும் ஒரு குடும்பத்தை சார்ந்து இருக்கிறது என்ற குற்றச்சாட்டை தான் பாஜக தொடர்ந்து வைத்து வருகிறது. உதயநிதி துணை முதல்வரானதன் மூலம் அது நிரூபணமாகி உள்ளது. வரும் காலத்தில் அவரது செயல்பாடுகளை எங்கு விமர்சிக்க வேண்டுமோ அங்கு விமர்சிப்போம். நன்றாக செயல்பட்டால், நிச்சயமாக பாராட்டுவோம்.தமிழகத்தில் பாஜகவில் பெரிய எண்ணிக்கையில் உறுப்பினர்கள் இணைந்துள்ளனர். இந்தியாவிலேயே திமுக, ஆம் ஆத்மி கட்சிகள்
தான் வித்தியாசமான பாதையில் பயணிக்கிறது. நிரபராதியை கொண்டாடுவதுபோல, முதல்வர் மு.க.ஸ்டாலின் செந்தில் பாலாஜியை கொண்டாடுகிறார்.

இது ஆச்சரியமாக இருக்கிறது. இதேதான் ஆம் ஆத்மி கட்சியிலும் நடக்கிறது. சீமான் புதிய பாதையில் பயணிக்கிறார். பாஜகவின் பாதையும், சீமானின் பாதையும் வேறுவேறு. பாமக, அமமுக எங்களுடன் தொடர்ந்து கூட்டணியில் இருக்கிறார்கள். இதுவரை இல்லாத அளவுக்கு 2026 தேர்தல் புதிய களமாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

அதானிக்கு திமுக சலுகை: பின்னர் கோவை சென்ற அவர் அங்கு செய்தி​யாளர்​களிடம் கூறும்​போது, 'தமிழகத்​தில் சட்டம், ஒழுங்கு மோசமாக உள்ளது. கோவை​யில் எரிவாயு குழாய் பதிக்​கும் திட்டம் தொடர்பாக விவசா​யிகளின் கோரிக்கை நியாய​மானது. பாஜக சார்​பில் மத்திய அமைச்சரை சந்தித்து முடிந்​தவரை சாலை​யின்​கீழ் கொண்டு செல்ல வலியுறுத்​தப்​படும். அதானிக்கு திமுக அரசு வழங்​கி​யுள்ள சலுகைகள் குறித்து தரவு​களுடன் தெரி​விப்​பேன்' என்​றார்​.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE