எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி நாகை மீனவர்கள் 12 பேர் துப்பாக்கி முனையில் கைது

By KU BUREAU

நாகப்பட்டினம்: எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாகக் கூறி, நாகை மீனவர்கள் 12 பேரை துப்பாக்கி முனையில் கைது செய்த இலங்கை கடற்படையினர், அவர்களது விசைப்படகையும் பறிமுதல் செய்துள்ளனர்.

நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை மீனவக் கிராமத்தைச் சேர்ந்த சிலம்புச்செல்வன் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில், அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த மோ.குணா(40), கா.செஞ்சிவேல்(45), ப.வெங்கடேசன்(45), ப.அலெக்ஸ்(28), சின்னஅப்பு(25), கா.கார்த்தி(22), ச.வளர்செல்வன்(25), செ.ரகு(45), வீ.ரவி(50), த.மேகநாதன்(50), புஷ்பவனத்தைச் சேர்ந்த கு.மகேந்திரன் (55), ம.சாமுவேல்(20) ஆகிய 12 மீனவர்கள் நேற்று முன்தினம் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர். நள்ளிரவில் கோடியக்
கரைக்கு தென்கிழக்கே 40 கடல் மைல் தொலைவில் அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது, அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாகக் கூறி மீனவர்கள் 12 பேரையும் துப்பாக்கி முனையில் கைது செய்தனர். மேலும், அவர்களது விசைப்படகையும் பறிமுதல் செய்தனர். பின்னர், கைது செய்யப்பட்ட 12 பேரையும் மயிலட்டி மீன்பிடித் துறைமுகத்துக்கு அழைத்துச் சென்று, விசாரணை நடத்தினர். தொடர்ந்து, யாழ்ப்பாணம் மீன்வளத் துறை அதிகாரிகளிடம் 12 மீனவர்களும் ஒப்படைக்கப்பட்டனர்.

இதையடுத்து, பருத்தித் துறை நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்ட 12 மீனவர்களும் நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைக்கப்பட்டனர். நாகப்பட்டினம் மீனவர்கள் 12 பேர் துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டுள்ளது, தமிழக மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE