இலங்கை சிறைகளில் உள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும்: ராமேசுவரத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

By எஸ்.முஹம்மது ராஃபி

ராமேசுவரம்: இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேசுவரத்தில் மீனவர்கள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ராமேசுவரம் மீன்பிடி இறங்குதளத்தில் இருந்து கடந்த புதன்கிழமை கடலுக்குச் சென்ற மகேந்திரன், ராமர்பாண்டி என்பவர்களுக்குச் சொந்தமான இரண்டு விசைப் படகுகளை இலங்கை கடற்படையினர் கைப்பற்றினர். அந்தப் படகுகளிலிருந்த 16 மீனவர்கள் மீதும் எல்லை தாண்டி மீன்பிடித்தல், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்துள்ளனர்.

இந்நிலையில், இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் மீனவர்களையும், படகுகளையும் உடனடியாக விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ராமேசுவரம் பேருந்து நிலையம் அருகே மீனவர்கள் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு மீனவப் பிரதிநிதி சேசுராஜா தலைமை வகித்தார். மீனவப் பிரதிநிதிகள் சகாயம், எம்ரிட் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் இலங்கை கடற்படையினரால் மூழ்கடிக்கப்பட்ட மற்றும் சேதப்படுத்தப்பட்ட படகுகளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும். ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் அதிக குதிரை திறன் உள்ள இன்ஜின்களை பயன்படுத்தி மீன்பிடித் தொழிலில் ஈடுபடுபவர்கள் மீது மீன்வளத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் இலங்கை சிறையில் உள்ள மீனவர்களின் குடும்பத்தினர் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE