தீபாவளி பண்டிகையின்போது ஆம்னி பேருந்து கட்டணம் உயர்த்தப்படாது: போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் தகவல்

By KU BUREAU

சென்னை: தீபாவளி பண்டிகையின்போது கட்டணத்தை உயர்த்தாமல் ஆம்னி பேருந்துகளை இயக்குவதாக உரிமையாளர்கள் உறுதி அளித்துள்ளனர் என்று போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.

தீபாவளி பண்டிகை காலத்தில் ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை கட்டுக்குள் வைப்பதுதொடர்பாக, சென்னை கிண்டியில் உள்ள போக்குவரத்து ஆணையரகத்தில் பேருந்து உரிமையாளர்களுடன் அமைச்சர் சிவசங்கர் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில், போக்குவரத்து ஆணையர் சுன்சோங்கம் ஜடக்சிரு, கூடுதல் ஆணையர் சிவகுமரன், இணை ஆணையர் பொன்.செந்தில்நாதன், உரிமையாளர்கள் தரப்பில் அன்பழகன், திருஞானம், அப்சல்,முத்துக்குமார், மாறன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது: தீபாவளியின்போது பொதுமக்கள் சொந்த ஊர் செல்ல அரசுபேருந்துகளை ஏற்பாடு செய்வதுடன், ஆம்னி பேருந்துகளில் மக்கள் சுமுக பயணம் மேற்கொள்ளும் வகையில் உரிமையாளர்களுடன் ஆலோசனை நடத்த முதல்வர் உத்தரவிட்டார். கடந்தஆண்டு போலவே, தீபாவளி பண்டிகை காலத்தில் கட்டண உயர்வின்றி மக்கள் பயணம் செய்யஉதவுவதாக உரிமையாளர்கள் உறுதி அளித்துள்ளனர். அதேநேரம், கடந்த ஆண்டைவிட முன்பதிவு குறைந்துள்ளதாக தெரிவித்தனர். ஆனால், அரசு பேருந்துகளுக்கான முன்பதிவு அதிகரித்துள்ளது.

கிளாம்பாக்கத்தில் இருந்து புறப்படும்போது, போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் காவல் துறை மூலமாகவும், சுங்கச்சாவடிகளில் தாமதம் ஏற்படாத வகையில் கட்டணமின்றி செல்லவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர். அந்தவகையில், தீபாவளிக்கு முன்பும்,பண்டிகை முடிந்து திரும்பும்போதும் நெரிசல் இல்லாமல் இருப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். சுங்கச்சாவடியை பொறுத்தவரை நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளுடன் தலைமைச் செயலர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

மக்களுக்கு போதிய வசதிகளை செய்துதர வேண்டிய கடமைஇருப்பதால், கூடுதல் பேருந்துகள்இயக்குவதோடு, ஒப்பந்த அடிப்படையில் தனியார் பேருந்துகளையும் இயக்குகிறோம். இதுதவிர, சொகுசு பயணத்துக்காக ஆம்னி பேருந்துகளை நாடும் பொதுமக்கள், புகார் அளிப்பது இல்லை. எனினும், மக்களின் பிரச்சினைகளை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். எனவே, புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

தொடர்ந்து ஆம்னி பேருந்துகள் இயக்கும் உரிமையாளர்கள் கட்டணத்தை உயர்த்துவது இல்லை.சங்கத்தின் தொடர்பு இல்லாமல்,புதிதாக பேருந்து இயக்குபவர்கள்தான் கட்டணத்தை உயர்த்துகின்றனர். இதுதொடர்பாக 1800425 6151 என்ற எண்ணில் பெறப்படும் புகார்களின் அடிப்படையில் கட்டணத்தை பயணியிடம் திருப்பி செலுத்துதல், விதிமீறலுக்கு அபராதம் விதித்தல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும். புதிய ஆம்னி பேருந்து நிலையம் திறக்கும் வரை, அவரவர் பணிமனையில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அவை 400 அடி புறவழிச்சாலை வழியாக செல்லும். இவ்வாறு அமைச்சர் கூறினார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE