நடிகை கவுதமிக்கு அதிமுகவில் முக்கிய பொறுப்பு: அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி!

By KU BUREAU

சென்னை: பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த நடிகை கவுதமிக்கு அக்கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல பாஜகவிலிருந்து வந்த தடா பெரியசாமிக்கும் முக்கிய பொறுப்பு கொடுத்துள்ளது அதிமுக தலைமை.

தொடக்கம் முதலே பாஜகவில் செயல்பட்டு வந்தவர் நடிகை கவுதமி. அவர் 2021 சட்டமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட காய் நகர்த்தினார். ஆனால் அது கைகூடவில்லை. பின்னர் சொந்த பிரச்சினை காரணமாக அவர் அவர் கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார்.

அதேபோல சிதம்பரம் மக்களவை தொகுதியில் பாஜகவில் சீட் கிடைக்காத அதிருப்தியில் தடா பெரியசாமியும் அக்கட்சியில் இருந்து விலகி, அதிமுகவில் இணைந்தார். இந் நிலையில் இவர்கள் இருவருக்கும் கட்சியில் முக்கிய பொறுப்புகளை அளித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.

அதன்படி நடிகை கவுதமிக்கு அதிமுகவில் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. தடா பெரியசாமி அனைத்துலக எம்.ஜி.ஆர்., மன்ற துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், சிறுபான்மையினர் நலப்பிரிவு துணைச் செயலாளராக ஃபாத்திமா அலியும், கழக விவசாயப்பிரிவு துணைச் செயலாளராக பி.சன்னியாசியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE