ராஜபாளையம் அருகே பைக் மீது டிப்பர் லாரி மோதி விபத்து: புதுமாப்பிள்ளை உட்பட இருவர் உயிரிழப்பு

By அ.கோபாலகிருஷ்ணன்

ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே அம்மன்கோவில்பட்டியில் பைக் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் புதுமாப்பிள்ளை உட்பட இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

ராஜபாளையம் அருகே அம்மன்பொட்டல்புதூர் பகுதியை சேர்ந்த ராஜதுரை மகன் ரவிக்குமார் (23). ஓட்டுநர். இவருக்கு வினோதா (20) என்ற பெண்ணுடன் 20 நாட்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. ரவிக்குமார் தனது நண்பரான சந்தனம் மகன் ரஞ்சித்குமார் (23) என்பவரும் நேற்று பைக்கில் ராஜபாளையம் சென்றனர்.

அங்கிருந்து நேற்று மாலை 4:30 மணி அளவில் பைக்கில் ஊர் திரும்பினர். அப்போது சத்திரபட்டி - நத்தம்பட்டி செல்லும் சாலையில் கோபாலபுரம் அருகே எதிரே நான்கு வழிச்சாலை பணிக்காக பொருட்களை ஏற்றி வந்த டிப்பர் லாரி, பைக் மீது மோதியது. இதில் ரவிக்குமார், ரஞ்சித்குமார் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். டிப்பர் லாரி ஓட்டுநர் அங்கிருந்து தப்பி ஓடினார். இறந்தவர்களின் உடல்களை எடுக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த டி.எஸ்.பி பிரீத்தி பேச்சுவார்த்தை நடத்தினார். விபத்து குறித்து கீழராஜகுலராமன் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இப்பகுதியில் அதிவேகமாக செல்லும் வாகனங்களால் தொடர் விபத்துக்கள் நடப்பதால் வேகத்தடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE