செங்கல்பட்டு: அரசுப் பேருந்தை சிறை பிடித்து சாலையில் நாற்று நட்டு போராட்டம்

By பெ.ஜேம்ஸ் குமார்

செங்கல்பட்டு: வேடந்தாங்கல் அருகே கிராம மக்கள் குண்டும் குழியுமாய் கிடக்கும் சாலையை சரிசெய்யக் கோரி பேருந்தை சிறைபிடித்து சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செங்கல்பட்டு மாவட்டம், வேடந்தாங்கல் அருகே உள்ள வெள்ளபுத்தூர் ஊராட்சி உள்ளது. இங்கு 1,500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். வெள்ளபுத்தூரில் இருந்து எல். எண்டத்தூர், வேடந்தாங்கல், பாப்பநல்லூர் வழியாக உத்திரமேரூர், காஞ்சிபுரம் செல்ல சாலை வசதி உள்ளது.

இதில், வெள்ளபுத்தூர் ஊராட்சி பகுதிக்குச் செல்லும் சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தார் சாலையாகப் போடப்பட்டது. தற்போது கடந்த மூன்று ஆண்டுகளாக சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டு ஜல்லிகள் பெயர்ந்து குண்டும் குழியுமாகி படுமோசமான நிலையில் உள்ளது. மழைக்காலங்களில் சாலையில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது.

இதனால், இருசக்கர வாகனம் மற்றும் சைக்கிளில் பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் மாணவர்கள் மற்றும் வெளியூர்களுக்கு பணிக்குச் செல்வோர் மிகுந்த அவதி அடைகின்றனர். அவசர உதவிக்கு ஆம்புலன்ஸ் வருவதற்கு கூட காலதாமதம் ஏற்படுவதாகவும், கூடுதல் கட்டணம் கொடுத்து ஆட்டோவில் செல்ல வேண்டி இருப்பதாகவும் இப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.

இந்த சாலையை சீரமைத்து தரக் கோரி கடந்த மூன்று ஆண்டுகளாக ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகளுக்கு பலமுறை மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில், தற்போது பெய்து வரும் பருவமழை காரணமாக, சாலையில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் பெரிதும் சிரமத்துக்கு உள்ளாகி வரும் மக்கள், இப்பகுதிக்கு புதிய தார்சாலை அமைந்து தரக்கோரி இன்று அரசுப் பேருந்தை சிறை பிடித்து சாலையில் உள்ள பள்ளங்களில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE