கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதால் நீக்கப்பட்டவர்களை மீண்டும் இணைக்க முடியாது: பழனிசாமி திட்டவட்டம்

By KU BUREAU

சென்னை: ‘கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க முடியாது’ என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் 53-ம் ஆண்டு தொடக்க விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பங்கேற்று எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் சிலைகளுக்கு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து கட்சிக் கொடியை ஏற்றிவைத்து, தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார். தொடர்ந்து ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பழனிசாமி கூறியதாவது: எம்ஜிஆரால் 1972-ம் ஆண்டு அக்.17-ம் தேதி தொடங்கப்பட்ட அதிமுக, இன்று 53-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. அதிமுக தொடங்கப்பட்டதால்தான் இந்திய அளவில் தமிழகம் வளர்ச்சி அடைந்து நிற்கிறது. சென்னையில் 20 செமீ மழைபெய்தாலும் ஒரு சொட்டு தண்ணீர்கூட தேங்காது என்று முதல்வர், அமைச்சர்கள், மாநகராட்சி மேயர்உள்ளிட்டோர் 2022-ம் ஆண்டு தெரிவித்தனர். 2023-ம் ஆண்டும் அதையேதெரிவித்தனர். இன்று எல்லா இடத்திலும் மழை நீர் தேங்கி உண்மை நிலை வெளிவந்து விட்டது. அதிமுக ஆட்சியில் அடையாறு, கொசஸ்தலையாறு, கோவளம் ஆகிய வடிநிலப் பகுதிகளில் 2,400கிமீ நீளத்துக்கு மழை நீர் வடிகால்அமைக்கும் திட்டம் தொடங்கப் பட்டது. எஞ்சிய பணிகளை திமுக அரசு முறையாக நிறைவேற்றி இருந்தால் இன்று சென்னை இப்படி தத்தளித்து இருக்காது.

முதிர்ச்சியில்லாமல் பேசுகிறார்: வெள்ளத்தால் சென்னை பாதிக்கப்படுவதைத் தடுக்க திருப்புகழ் கமிட்டியை திமுக அரசு அமைத்தது. அவரின் பரிந்துரை என்ன, அதன்மூலம் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தினேன். பெருமழையால் சென்னையில் நீரேதேங்கவில்லை. இதுதான் வெள்ளை அறிக்கை என முதிர்ச்சி இல்லாமல் துணை முதல்வர் உதயநிதி கூறுகிறார்.

எல்லாமே துணை முதல்வர் உதயநிதி தலைமையில்தான் பணிகள் நடைபெற்றன. அனுபவம் வாய்ந்த மூத்த அமைச்சர்கள் இருந்தும் உதயநிதி முன்னிலைப்படுத்தப் பட்டார். சாதாரண மழைக்கே திமுக அரசு அலறுகிறது. அதிமுக பார்க்காத புயலே இல்லை. முதல்வர்ஸ்டாலின், தூய்மை பணியாளர்களின் பிரச்சினைகளை தீர்க்கவில்லை. ஆனால் டீ வாங்கிக் கொடுக்கிறார். தூய்மை பணியாளர்கள் நலன் குறித்து பேச திமுகவினருக்கு தகுதியே இல்லை.

அதிமுகவில் பிரிவு இல்லை: அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் இன்று எத்தனையோ அவதாரங்களை எடுக்கிறார்கள். ஒன்றாக இருப்பதால்தான் இத்தனை பேர் இங்கு நிற்கின்றோம். அதிமுக இரண்டாகிவிட்டது, பிரிந்து கிடக்கிறது என்ற வார்த்தையை இனி உபயோகிக்கவே வேண்டாம். அதிமுக ஒன்றுதான். முன்னாள் அமைச்சர்கள் 6 பேர் கட்சி ஒருங்கிணைப்பு தொடர்பாக என்னை சந்தித்ததாகக் கூறப்படுவது பச்சை பொய். கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதால் அவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள், நீக்கப்பட்டவர்கள்தான். அவர்களை மீண்டும் இணைக்க வாய்ப்பு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் கட்சியின் அவைதலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் சி.பொன்னையன், திண்டுக்கல் சீனிவாசன், நத்தம்விஸ்வநாதன், கே.பி.முனுசாமி,எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக் குமார், பா.பென்ஜமின், எஸ் கோகுல இந்திரா, பா.வளர்மதி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE