பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் தற்காலிக பட்டாசு கடைகள் கூடாது: திருச்சி எஸ்பி பதிலளிக்க உத்தரவு

By கி.மகாராஜன்

மதுரை: திருச்சியில் பள்ளி, கல்லூரி, கோயில் மற்றும் திருமண மண்டபங்கள் அருகே தற்காலிக பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்க தடை கோரிய வழக்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்சியை சேர்ந்த கிறிஸ்துராஜ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில்: "திருச்சியில் தற்காலிக பட்டாசு கடைகளை நடத்த வெடிபொருள் விதிகளை மீறி உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளது. பாதுகாக்கப்பட்ட பகுதிகளான கல்லூரி, பள்ளி, மருத்துவமனைகள் போன்றவற்றிலிருந்து 50 மீட்டர் தொலைவில் தற்காலிக பட்டாசு கடைகளுக்கு உரிமம் வழங்கக்கூடாது என்பது விதியாகும். பட்டாசு கடைகளில் தீர்ப்பற்றாத வகையில் மேற்கூரைகள் அமைக்க வேண்டும். ஒவ்வொரு கடைக்கும் இடையே மூன்று மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும்.

எதிர் எதிரில் பட்டாசு கடைகள் அமைக்கக்கூடாது. எண்ணெய் விளக்குகள், கேஸ் விளக்குகள் போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை பட்டாசு கடைகளுக்கு உரிமம் வழங்குவதற்கு முன்பு உறுதி செய்ய வேண்டும். திருச்சியில் போலீஸார் சம்பவ இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தாமல் உரிமம் வழங்கியுள்ளார். எனவே திருச்சியில் சூப்பர் மார்க்கெட்டுகள், திருமண மண்டபங்கள், பள்ளி, கல்லூரிகள், கோயில் போன்ற பாதுகாக்கப்பட்ட பகுதிகளின் அருகே தற்காலிக பட்டாசு கடைகளை அமைக்க அனுமதி வழங்கக் கூடாது என உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்,விக்டோரியாகௌரி அமர்வு விசாரித்து, மனு தொடர்பாக திருச்சி மாவட்ட காவல் ஆணையர், திருச்சி மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE