மழையால் நிரம்பி வழிந்து ஓடும் நந்தியாறு - திருச்சி, பெரம்பலூர் கிராமங்களில் பயிர்கள் சேதம்

By KU BUREAU

திருச்சி: பெரம்பலூர் மாவட்டத்தில் தொடங்கும் நந்தியாறு, திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் இருதயபுரம் வழியாக கொள்ளிடம் ஆற்றில் சேர்கிறது. இந்த ஆறுக்கு முறையான கரை இல்லை. இதனால், மழைக்காலங்களில் வெள்ளம் வந்தால் நந்தியாறு வழிந்து சாலைகள், ஊருக்குள் வெள்ளநீர் புகுந்து சேதம் ஏற்படும்.

நந்தியாறு, லால்குடி வட்டத்தில் உள்ள கிராமங்கள் வழியாக கொள்ளிடத்துக்குச் செல்லும். இந்நிலையில், பெரம்பலூர், திருச்சி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக நந்தியாற்றில் நேற்று முன்தினம் நீர் வழிந்து, லால்குடி வட்டம் செம்பரை, புஞ்சை சங்கேந்தி, கூடலூர், வண்டலை உள்ளிட்ட சில கிராமங்களில் வெள்ளம் புகுந்தது.

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த ப.துரை கருப்பசாமி கூறியது: புள்ளம்பாடி- செம்பாரை, புள்ளம்பாடி- நஞ்சை சங்கேந்தி ஆகிய 2 சாலைகளிலும் நீர் பெருக்கெடுத்து ஓடுவதால், சம்பா நெல் சாகுபடி மற்றும் குறுவை அறுவடை பணி பாதிக்கப்பட்டுள்ளது. நந்தியாற்றின் இருபுறமும் தடுப்பணைகள் கட்டினால்தான் விவசாயிகள் மற்றும் அப்பகுதி மக்கள் பயன்பெறுவர் என்றார்.

இதனிடையே, செம்பரை கிராமத்தில் அறுவடைக்குத் தயாராக இருந்த 20 ஏக்கர் குறுவை நெற்பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் மழை குறைந்ததைத் தொடர்ந்து, நேற்று நீர் வடியத் தொடங்கியது. அதேவேளையில், 6 முதல் 7 மணி நேரம் வரை பலத்த மழை பெய்தாலும், ஓரிரு நாட்களில் வரத்து குறைந்து விடும் என நீர்வளத் துறை பொறியாளர் ஒருவர் தெரிவித்தார்.

மேலும், அதே பகுதியில் கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு ரூ.60 கோடி மதிப்பிலான திட்டம் சமர்ப்பிக்கப்பட்டது. இதில் 7 தடுப்பணைகள், 3 பாலங்கள் மற்றும் ஆற்றை நீட்டிக்கும் திட்டம் அடங்கும் என்றார். பலத்த மழை காரணமாக வைரிசெட்டிபாளையம் மற்றும் உப்பிலியபுரத்தில் 25 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE