நீர்நிலை பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்கவும்; குடிநீரை காய்ச்சி பருக வேண்டும்: மக்களுக்கு கோவை ஆட்சியர் அறிவுறுத்தல் 

By இல.ராஜகோபால்

கோவை: நீர்நிலை பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்கவும், குடிநீரை காய்ச்சி பருக வேண்டும் என, பொதுமக்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

கோவை, ஆர்எஸ்புரம் கலையரங்கத்தில், அமைக்கப்பட்டுள்ள அவசர கால கட்டுபாட்டு உதவி மையத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி மேயர் கே.ரங்கநாயகி, மாநகராட்சி ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன், ஆகியோர் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கூறியதாவது: வடகிழக்கு பருவமழை தற்போது தொடங்கி உள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆராய்ச்சி மையம் அறிவுறுத்தியுள்ளது. மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி சார்பில் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பொதுமக்கள் ஆபத்தான ஆறு மற்றும் நீர்நிலைப் பகுதிகளில் செல்பி எடுப்பது, குளிப்பது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். கனமழையின் போது ரயில்வே சுரங்கப்பாதை, தரைப்பாலம் உள்ளிட்ட மழைநீர் தேங்கி இருக்கும் பகுதிகளில் வாகனங்களில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும்.

மழையால் தங்களது வீடுகளுக்கு அருகில் மரங்கள், கட்டிடங்கள் மற்றும் சுற்று சுவர் ஏதேனும் விழும் நிலையில் இருந்தால் உடனடியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள அவசர கட்டுப்பாட்டு மையத்திற்கு அல்லது மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு மையத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும் மழைக்காலத்தில் நோய் தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE