திருச்செங்கோடு அருகே திருமணிமுத்தாறு வெள்ளத்தில் மூழ்கி  விவசாயி  உயிரிழப்பு

By கி.பார்த்திபன்

நாமக்கல்: திருச்செங்கோடு அருகே திருமணிமுத்தாறு வெள்ளத்தில் மூழ்கி விவசாயி ஒருவர் உயிரிழந்தார்.

திருச்செங்கோடு அருகே எலச்சிபாளையம் கொன்னையார் வழியாக திருமணிமுத்தாறு பாய்ந்தோடுகிறது. கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் திருமணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கொன்னையார் அரசடிகாட்டைச் சேர்ந்த விவசாயி பெரியசாமி (58) இன்று அதிகாலை 5 மணியளவில் அவரது வீட்டில் இருந்து விவசாய தோட்டத்திற்கு திருமணிமுத்தாற்றின் குறுக்கே உள்ள சிறு பாலம் வழியாக நடந்து சென்றுள்ளார். அப்போது ஆற்றில் அதிக அளவு தண்ணீர் சென்றதால் நிலை தடுமாறி கீழே விழுந்து ஆற்றில் அடித்து செல்லப்பட்ட அவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

தகவலறிந்து அங்கு வந்த திருச்செங்கோடு தீயணைப்புப் படையினர் நீண்ட நேர போராட்டத்திற்குப் பின் பெரியசாமியின் உடலை ஆற்றில் இருந்து மீட்டனர். அதன் பிறகு அவரது உடல் போலீஸாரால் பிரேதப் பரிசோதனைக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக எலச்சிபாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE