தங்க நகைகளுக்கான ஜிஎஸ்டியை 1.5% ஆக குறைக்க வேண்டும்: தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம்

By இல.ராஜகோபால்

கோவை: தங்க நகைகள் மீது விதிக்கப்படும் 3 சதவீத ஜிஎஸ்டி வரியை 1.5 சதவீதமாக குறைக்க வேண்டும் என, தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கோவை தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 18-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம், தெலுங்குபாளையம் பகுதியில் இன்று நடந்தது. கோவை தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் முத்துவெங்கட்ராம் தலைமை வகிக்தார். இந்திய தொழில் வர்த்தக சபை கோவை தலைவர் ராஜேஷ் லுந் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இக்கூட்டத்தில், தங்கத்தின் மீது விதிக்கப்பட்ட இறக்குமதி வரி 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைத்த மத்திய அரசின் நடவடிக்கைக்கு வரவேற்பு தெரிவிக்கப்பட்டது. தமிழக அரசு துணை முதல்வராக பொறுப்பேற்ற உதயநிதி சிறப்பாக பணியாற்ற வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

மேலும் கடன் தொகையை முன்கூட்டியே திருப்பி செலுத்தும் குறு, சிறு நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்க கூடாது என, வங்கிகளுக்கு, ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ள நடவடிக்கை மிகவும் வரவேற்கத்தக்கது. விற்பனையாளர்கள், வாங்குபவர்கள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யும் போது, தொகை செலுத்த கால நிர்ணயம் இல்லாத வகையில் எம்எஸ்எம்இ சட்டத்தில்(43 பிஎச்) மத்திய நிதியமைச்சகம் திருத்தம் செய்ய வேண்டும்.

தங்க நகைகளை விற்பனை செய்யும் போது வாடிக்கையாளருக்கு ரூ.2 லட்சம் வரை தங்க நகை தயாரிப்பாளர்கள் ரொக்கமாக வழங்க அனுமதிக்க வேண்டும். தங்க நகைகள் மீது விதிக்கப்பட்டுள்ள 3 சதவீத ஜிஎஸ்டி வரியை 1.5 சதவீதமாக குறைக்க வேண்டும். என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக ஆண்டு பொதுக்குழு கூட்டத்தின் ஒரு பகுதியாக தங்க நகைகள் கண்காட்சி நடந்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE