மாவட்ட வளர்ச்சி பணிகளை கண்காணிக்க பொறுப்பு அமைச்சர்களை நியமித்து முதல்வர் உத்தரவு: தமிழக அரசு தகவல்

By KU BUREAU

சென்னை: தமிழகத்தில் மாவட்ட வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்தவும், இதர பணிகளைக் கண்காணிக்கவும், பொறுப்பு அமைச்சர்களை நியமித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தமிழகத்தில் மாவட்ட வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்தவும், பொதுமக்களுக்குச் சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளைக் கண்காணிக்கவும், இயற்கைச் சீற்றம், நோய்த்தொற்று இன்னபிற நேரங்களில் அவசரகால பணிகளை கூடுதலாக மேற்கொள்ளவும் அமைச்சர்கள் சிலரை, சில மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்களாக நியமித்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி. வருவாய் மாவட்டவாரியாக பின்வரும் அமைச்சர்கள் பொறுப்பு அமைச்சர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி திருநெல்வேலிக்கு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, தேனிக்கு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சிக்கு பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, தருமபுரிக்கு வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தென்காசிக்கு வருவாய்த் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர். ராமச்சந்திரன், கன்னியாகுமரிக்கு நிதித்துறை அமைச்சர் தங்கம்தென்னரசு ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல், நீலகிரிக்கு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், கிருஷ்ணகிரிக்கு உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி, கோயம்புத்தூருக்கு மின்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி, காஞ்சிபுரத்துக்கு கைத்தறித் துறை அமைச்சர் ஆர்.காந்தி, பெரம்பலூருக்கு போக்குவரத்துத்துறை அமைச்சர்எஸ்.எஸ்.சிவசங்கர், நாகப்பட்டினத்துக்கு பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மயிலாடுதுறைக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE