தாராசுரத்தில் டாஸ்மாக் கடை திறந்ததைக் கண்டித்து பெண்கள் முற்றுகை

By சி.எஸ். ஆறுமுகம்

கும்பகோணம்: கும்பகோணம் வட்டம், தாராசுரம் மார்க்கெட் பகுதியில் 2 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் 3வது டாஸ்மாக் கடை திறக்கப்படுவதாக தகவல் பரவியது.

இதனால் அதிர்ச்சியடைந்த மல்லுக செட்டித் தெரு, தெற்கு தெரு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பெண்கள் மற்றும் பொதுமக்கள் 3வது டாஸ்மாக் மதுக்கடை திறப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்த கடையின் முன்பு கூடி கடந்த மாதம் 22ம் தேதி கூடுதலாக புதிய டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த வட்டாட்சியர் சண்முகம், காவல் ஆய்வாளர் சிவ செந்தில்குமார் மற்றும் டாஸ்மாக் நிர்வாகத்தினர்.

அந்த இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி டாஸ்மாக் கடை திறக்கப்படாது என உறுதி அளித்தனர். இதனால் பெண்கள் கலைந்து சென்றனர். இந்நிலையில் இன்று (8-ம்தேதி) மாலை தாராசுரம் மார்க்கெட் பகுதியில் ஏற்கனவே பெண்கள் எதிர்ப்பு தெரிவித்த இடத்தில் மீண்டும் டாஸ்டாக் கடை திறக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த பெண்கள் 50-க்கும் மேற்பட்டோர் திரண்டு டாஸ்மாக் கடைக்கு முன்பு அமர்ந்து மதுக்கடையை மூடும் வரை செல்லமாட்டோம் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த வட்டாட்சியர் சண்முகம், காவல் ஆய்வாளர்கள் சிவசெந்தில் குமார், ரேகா ராணி ஆகியோர் அந்த இடத்திற்கு வந்து டாஸ்மாக் உயரதிகாரிகளிடம் பேசி டாஸ்மாக் கடையை மூடிட அறிவுறுத்தினர். இதையடுத்து, டாஸ்மாக் பணியாளர்கள் கடையை மூடியதால் பெண்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் தாராசுரம் மார்க்கெட் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE