தேவிபட்டினம் அருகே 800 ஆண்டுகள் பழமையான மாறவர்மன் சுந்தரபாண்டியன் கல்வெட்டு கண்டெடுப்பு

By எஸ்.முஹம்மது ராஃபி

ராமேசுவரம்: ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அருகே பெருவயல் ரணபலி முருகன் கோயிலில் 800 ஆண்டுகள் பழமையான பாண்டியர் கல்வெட்டை ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனம் கண்டெடுத்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அருகே பெருவயலில், ரணபலி முருகன் கோயில் உள்ளது. இது கட்டயத்தேவர் என்ற குமாரமுத்து விஜய ரகுநாத சேதுபதி கி.பி.1728-1735) மன்னரின் பிரதானி வைரவன் சேர்வைக்காரரால் கட்டப்பட்ட கோயில். அவருக்கு பின் கி.பி.1736ல் குமாரமுத்து சேதுபதி பெருவயல் கலையனூர் எனும் கிராமத்தை கோயிலுக்கு தானமாகக் கொடுத்த கல்வெட்டு இந்த கோயிலில் உள்ளது.

இந்நிலையில் இந்த கோயிலில் 800 ஆண்டுகள் பழமையான பாண்டிய மன்னர் கல்வெட்டை ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு கண்டுபிடித்து படியெடுத்து ஆய்வு செய்தார்.

இதுபற்றி வே.ராஜகுரு கூறியதாவது: "புதியதாக கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டு, கோயில் திருச்சுற்று வடமேற்கு மூலையில் உள்ள தூண் போதிகையில் உள்ளது. இதில் ‘(சந்தி) விக்கிரகப் பேறும் மற்றும் எப்பேர்பட்டின(வும்), ரன்னொம் கைக்கொண்டு திருப்படி மாற்றுள்(ளிட்டு), செம்பிலும் வெட்டிக் கொள்க, இவை மதுரோதய வளநாட்டுக் காஞை (இருக்கை), பெருமணலூர் மந்திரி இராமனான ப(ல்லவராயன்)’ என உள்ளது.

கல்வெட்டில் சொல்லப்படும் பெருமணலூர் மந்திரி இராமனான பல்லவராயன் என்பவர், முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தைச் சேர்ந்த ஓர் அரசு அதிகாரியாவார்.

விருதுநகர் மாவட்டம், நரிக்குடி, திருத்தங்கல், ஈஞ்சார் கோயில் கல்வெட்டுகளில் இவர் பெயர் குறிப்பிடப்படுகிறது. இந்த கல்வெட்டு 800 ஆண்டுகள் பழமையான முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் (கி.பி.1216-1244) காலத்தைச் சேர்ந்ததாகும். பாண்டியர் காலத்தில் இருந்த கோயிலுக்கு தானம் வழங்கப்பட்டதை கல்வெட்டு தெரிவிக்கிறது.

இதில் சந்தி விக்கிரகப்பேறு என்ற வரியும், மதுரோதய வளநாட்டுக் காஞை (இருக்கை) என்ற நாட்டுப் பிரிவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தூணின் மேற்பகுதியை உத்தரத்துடன் இணைக்கும் விரிந்த கை போன்ற அமைப்பை போதிகை என்பர். பாண்டியர், நாயக்கர், சேதுபதி மன்னர் காலங்களில் கட்டப்பட்ட கோயில் தூண்களில் வெவ்வேறு வகையான போதிகைகளை அமைத்து அழகுபடுத்துவது வழக்கம்.

கல்வெட்டு உள்ள வெட்டுப் போதிகை எனும் அமைப்பு பாண்டியர் காலத்தை சேர்ந்ததாகும். பாண்டியர் கால வெட்டுப் போதிகைகளை சேதுபதி கால கருங்கல் தூண்களுடன் இணைத்து இக்கோயில் பிரகாரம் அமைக்கப்பட்டுள்ளது. வெட்டுப் போதிகை கற்கள் இவ்வூரில் இருந்து அழிந்து போன ஒரு பாண்டியர் கால சிவன் கோயிலில் இருந்து கொண்டுவரப் பட்டவையாக இருக்கலாம்" என்று கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE