சாலை விபத்தில் கல்லூரி மாணவர்கள் 3 பேர் உயிரிழப்பு

By KU BUREAU

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் கல்லூரி மாணவர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அசோக் நகரைச் சேர்ந்த தினகரன்(20), பாலாஜி(19), பிரவீன்(19) ஆகியோர் வெவ்வேறு கல்லூரிகளில் படித்து வந்தனர். இந்நிலையில், நேற்று இவர்கள் மூவரும் ஒரே இருசக்கர வாகனத்தில் திண்டுக்கல்-நத்தம் சாலையில், கோபால்பட்டி அருகே சென்றுகொண்டிருந்தனர்.

அப்போது வளைவில் திரும்ப முயன்ற கன்டெய்னர் லாரி, எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பாலாஜி, பிரவீன் ஆகியோர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த தினகரன் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்து குறித்து சாணார்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினர்.

இதற்கிடையில், விபத்து நேரிட்ட இடத்தில் அடிக்கடி இதேபோல விபத்துகள் ஏற்படுவதாகக் கூறி, அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய போலீஸார், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பின்னர், போராட்டம் கைவிடப்பட்டது

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE