ஆயுத பூஜை: சேலம், நாமக்கல் வழியாக சென்னை - நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்

By KU BUREAU

சேலம்: ஆயுதபூஜை விடுமுறை முன்னிட்டு சேலம், நாமக்கல் வழியாக சென்னை சென்ட்ரல் - நாகர்கோவில் இடையே வரும் 9-ம் தேதியும், நாகர்கோவில் - சென்னை சென்ட்ரல் இடையே 10-ம் தேதியும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

வரும் 11-ம் தேதி ஆயுதபூஜை, 12-ம் தேதி விஜயதசமி கொண்டாடப்பட உள்ளது. இந்த நாட்களைத் தொடர்ந்து, மறுநாள் ஞாயிற்றுக் கிழமை என 3 நாட்களும் தொடர் விடுமுறையாக அமைந்துள்ளது. எனவே வெளியூர்களில் வசிப்பவர்கள் ஆயுத பூஜையை கொண்டாட சொந்த ஊர் திரும்புவர் என்பதால் பேருந்துகள், ரயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதும்.

இந்நிலையில் ஆயுத பூஜையை முன்னிட்டு, சென்னை சென்ட்ரல் - நாகர்கோவில் இடையே அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர் வழியாக நாகர்கோவிலுக்கு வரும் 10ம் தேதி சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே இயக்குகிறது.

அதன்படி, சென்னை சென்ட்ரல்- நாகர்கோவில் (எண்.06178) சிறப்பு ரயிலானது சென்னையில் வரும் 9-ம் தேதி இரவு 7 மணிக்குப் புறப்பட்டு, சேலம் இரவு 11.48 மணி, நாமக்கல் நள்ளிரவு 12.49 மணி, கரூர் நள்ளிரவு 1.33 மணிக்கு வந்தடைந்து, காலை 10.50 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும்.

இதேபோல நாகர்கோவில்- சென்னை சென்ட்ரல் (எண்.06179) சிறப்பு ரயிலானது நாகர்கோவிலில் வரும் 10-ம் தேதி இரவு 7.30 மணிக்குப் புறப்பட்டு, கரூர் அதிகாலை 4.28 மணி, நாமக்கல் அதிகாலை 5.09 மணி, சேலம் காலை 6.15 மணிக்கு வந்தடைந்து, காலை 11.25 மணிக்கு சென்னை சென்ட்ரலை சென்றடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE