சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சொந்தமான 3 ஆயிரம் ஏக்கர் நிலங்களை மீட்க கோரி வழக்கு

By KU BUREAU

சென்னை: சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குச் சொந்தமான 3 ஆயிரம் ஏக்கர் நிலங்களை மீட்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், 12 வாரங்களுக்குள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குச் சொந்தமான 3 ஆயிரம் ஏக்கர் சொத்துகளை மீட்கக் கோரி சேலத்தைச் சேர்ந்த ஏ.ராதாகிருஷ்ணன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

ஆக்கிரமிப்பில் நிலங்கள்... அதில், சிதம்பரம் நடராஜர் கோயில் தற்போது பொது தீட்சிதர்களால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்தக் கோயிலுக்குச் சொந்தமாக பெரம்பலூர், திருநெல்வேலி, காரைக்கால், சேலம் என தமிழகம் முழுவதும் பல்வேறு ஊர்களில் 3 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் இருந்தன. ஆனால், இவை தற்போது ஆக்கிரமிப்பில் உள்ளன.

அதேபோல, சிதம்பரத்தில் மாணிக்கவாசகரால் தொடங்கப்பட்ட குரு நமச்சிவாய மடத்துக்குச் சொந்தமான சொத்துகளும் மாயமாகி வருகின்றன. இந்த மடத்துக்குச் சொந்தமான நிலங்களில் தற்போது 87 வீடுகளும், பள்ளியும் உள்ளன.

ஆனாலும், மடத்தின் செயல்பாடுகளுக்கோ, வளர்ச்சிக்கோ எந்தப் பலனும் இல்லை. இந்த மடத்துக்குச் சொந்தமான சொத்துகளை அளவிட ஏற்கெனவே மற்றொரு வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும்கூட, அந்த சொத்துகளை அதிகாரிகள் அளவிடவில்லை.

குரு நமச்சிவாய மடம்: எனவே, சிதம்பரம் நடராஜர் கோயில் மற்றும் குரு நமச்சிவாய மடத்துக்குச் சொந்தமான சொத்துகளை மீட்டு, அவற்றை முறையாகப் பராமரிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஆர்.மருதாச்சலமூர்த்தி ஆஜராகி வாதிட்டார். அதையடுத்து நீதிபதி, "கடலூர் மற்றும் காரைக்கால் மாவட்ட ஆட்சியர்கள், அறநிலையத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் இணைந்து, மனுதாரர் கோரியுள்ள சிதம்பரம் நடராஜர் கோயில் மற்றும் குரு நமச்சிவாய மடத்துக்குச் சொந்தமான சொத்துகளை மீட்க 12 வாரங்களுக்குள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என உத்தரவிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE